7 தமிழர் விடுதலை விவகாரத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது உச்சநீதிமன்றம்: டாக்டர் ராமதாஸ்
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவு எதுவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது மனித நேயமற்ற அதிகார அத்துமீறல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். இதேபோல் 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு சிறைவாசிகளான 7 பேரின் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் வரையறையின்றிக் காலம் தாழ்த்தி வருவது மனித நேயமற்றதும், அதிகார அத்துமீறலானதுமான செயலாகும். 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களில் ஒருவரான பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.
தேவை விரைவான முடிவு
இதன் பிறகாவது, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்குரிய முடிவினை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும். எடப்பாடி அ.தி.மு.க. அரசும் இனியும் வாய் மூடி வேடிக்கை பார்த்திராமல் உரிய முறையில் வலியுறுத்த வேண்டும்! இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கு: 7 தமிழர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியும்: பேரறிவாளன் வழக்கறிஞர்
கனிமொழி வலியுறுத்தல்
இதேபோல் திமுக எம்பி கனிமொழியும் தமது ட்விட்டர் பதிவில், பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையில் ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
ராஜீவ் வழக்கு: 7 தமிழர் விடுதலை குறித்து முடிவு எடுக்காத தமிழக ஆளுநர்-உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
ராமதாஸ் ட்வீட்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் ஆளுனர் தேவையற்ற காலதாமதம் செய்வதை அனுமதிக்க முடியாது; ஆளுனரிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும்" என்ற உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பு நிறைந்த வார்த்தைகள் 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் புதிய நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ் கொலை: சிபிஐ-ன் சதி விசாரணைக்கும் 7 தமிழருக்கும் தொடர்பே இல்லை- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
தவாக வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழரையும் விடுவிக்க வலியுறுத்தி தமிழகத்தின் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள்,இயக்கங்கள் மனித உரிமை ஆர்வலர்கள் ஆகிய எந்த ஜனநாயக குரலுக்கும் செவிசாய்க்காமல், தமிழக அமைச்சரவை தீர்மானத்தையும் கிடப்பில் போட்டுள்ளதோடு, பேரறிவாளன் அவர்களின் கருணை மனு மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காது ஆளுநர் காலம் தாழ்த்துவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், ஆளுநரின் முடிவுக்கு காத்திராமல் அவர்களின் 30 ஆண்டுகால கொடுஞ் சிறைவாசத்தை முடிவுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும்?