ஓய்வறியாச் சூரியன் ஓய்வெடுக்கச் சென்று ஓராண்டு ஆகிவிட்டது இன்று! ஸ்டாலின் கவிதாஞ்சலி!
Recommended Video
சென்னை: ஓய்வறியாச் சூரியன் ஓய்வெடுக்கச் சென்று ஓராண்டு ஆகிவிட்டது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இதையொட்டி இன்று நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அவரது நினைவுகளைச் சுமந்து அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே தொடங்கி தலைவர் நினைவகம் வரை நடைபெறும் அமைதி பேரணி நடைபெற்றது.
இதுகுறித்து தனது பேஸ்புக் பதிவில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில்
முத்தமிழ் அறிஞரே! உங்கள் கரகர காந்தக் குரலை கேட்டு ஓராண்டு ஆகிவிட்டது! மேடையில் மஞ்சள் சூரியனாய் நீங்கள் உதயமாவதை நிறுத்தி ஓராண்டு ஆகிவிட்டது! என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என விளித்து ஓராண்டு ஆகிவிட்டது!
ஓராண்டு காலம்
உடன்பிறப்பே என கடிதம் எழுதி ஓராண்டு ஆகிவிட்டது! என்ன சொல்லுவாரோ தலைவர் என காத்திருந்து ஓராண்டு ஆகிவிட்டது!
இந்த ஓராண்டு காலமாய் அவர் உடலாக நம் முன் தோன்றவில்லையே தவிர உணர்வாய், உரமாய், ரத்தமாய் நம்மோடு கலந்து விட்டார். தினமும் காலையில் எழுந்ததும் அவர் முகம்தான் என் நினைவுக்கு வருகிறது!
கருணாநிதி
நடைப்பயிற்சியில் முரசொலி அலுவலகத்தில் அண்ணா அறிவாலயத்தில், கோபாலபுரத்தில், சட்டமன்றம் செல்லும் போதும் அவரது நினைவுகள் நிழலாடுகின்றன என்பதை விட நிழலாக என்னை தொடர்கின்றன. தொலைவில் நின்று நம்மை ஒருவர் கவனித்து கொண்டிருந்தால் எப்படியிருக்கும். அப்படிதான் தலைவர் கருணாநிதி அவர்கள் நிறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கம்பீரம்
இந்த ஓராண்டு காலத்தில் எவ்வளவோ நிகழ்வுகள் நிகழ்ந்துவிட்டன. அவரே பெருமைப்படக் கூடிய நிகழ்வுகள்தான் அவை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தொகுதிகளில் புதுவை உள்பட தமிழக தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியை தவிர அனைத்திலும் திமுக வென்று காட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக கம்பீரமாக திமுக அமர்ந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக கம்பீரமாக திமுக அமர்ந்துள்ளது.
100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்
தமிழக சட்டமன்றத்துக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சியில் இருந்து 12 தொகுதிகளை நாம் பறித்துள்ளோம். தமிழக சட்டமன்ற வரலாற்றில் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட மாபெரும் எதிர்க்கட்சியாக நாம் உட்கார்ந்துள்ளோம்.
சாதித்துவிட்டோம்
இந்தி கீதம் ஒலிக்கும் நாடாளுமன்ற மண்டபத்தில் நமது நாடாளுமன்ற எம்பிக்கள் தமிழின் குரலை எதிரொலித்துக் கொண்டிருக்கின்றனர். கலைஞர் அவர்களே நீங்கள் இருந்திருந்தால் இவை அனைத்தையும் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்து உற்சாகத்தால் கொண்டாடி இருப்பீர்கள்.
நீங்கள் இருந்து சாதிக்க வேண்டியதை உங்களது உடன்பிறப்புகளாக நாங்கள் இருந்து சாதித்து காட்டிவிட்டோம். இன்னும் சாதிப்போம்.
உங்கள் பெயர்
முத்தமிழ் அறிஞர் கருணாநிதி அவர்களே! இந்த வெற்றிக்கு யார் காரணம் நாங்கள்தான் காரணம். நீங்கள் கொடுத்த உற்சாகம்தான் காரணம். உங்களது பெயரைத்தான் காலையும், மாலையும், இரவும் சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.
முன்னேற்ற 3
கலைஞர் என்ற சொல்லே எமக்கு வைட்டமின் மாத்திரையாக இருக்கிறது. அந்த சொல்லைவிட எமக்கு வெற்றிச் சூத்திரம் தேவை இல்லை. அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்றிருக்கக் கூடிய கலைஞர் அவர்களே உங்களுடைய சக்தியில் பாதியை எங்களுக்கு தாருங்கள். அண்ணாவிடம் பெற்ற இதயத்தைத் தாருங்கள்! உடன்பிறப்பே என்ற சொல்லைத் தாருங்கள்! திமுகவை முன்னேற்ற இம்மூன்றும் போதும். தாய்த் திருநாட்டை வளர்த்தெடுக்க இந்த மூன்றும் போதும். மறுக்காமல் தருவாயா மறையாச் சூரியனே! என ஸ்டாலின் தனது கவிதாஞ்சலியில் தெரிவித்துள்ளார்.