ஓபிசி இடஒதுக்கீடு- சமூகநீதிக்கான சங்கநாதமாக அமைந்துள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு: ஸ்டாலின்
சென்னை: ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூக நீதிக்கான சங்கநாதம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
மருத்துவ இடங்களில் பிற்படுத்தப்பட்ட (BC, MBC) சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு உரிமை உண்டு என்று திமுக தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஓபிசியினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு- சீமான் மகிழ்ச்சி
நான்கு ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பாஜக அரசு இழைத்து வந்த அநீதிக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சமூகநீதி வீழ்த்தப்படும் போதெல்லாம் தமிழகமே ஓரணியில் நிற்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கில் திறமையாக வாதிட்ட மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர்களுக்கும் பாராட்டுகள்; வாழ்த்துகள்! இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதைத் தவிர்த்து, நீதிமன்றம் வழங்கியுள்ள மூன்றுமாதக் காலக்கெடுவரை காத்திராமல், உரிய இடஒதுக்கீட்டினை வழங்கிட மத்திய பாஜக அரசு முன்வர வேண்டும்!
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொல். திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு- உயர்நீதிமன்றத் தீர்ப்பை விசிக வரவேற்கிறது. மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50% வழங்க விரைந்து சட்டமியற்ற வேண்டும். அத்துடன், SC- 18%; ST-1% - என இடஒதுக்கீடு வழங்கவும் மோடிஅரசு ஆவன செய்யவேண்டும். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.