பாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ... "அவங்க எங்க முன்னோடி".. உரிமை கொண்டாடி மகிழும் திமுக!
சென்னை: பத்ம விருது பெற்ற பாப்பம்மாள் திமுகவை சேர்ந்தவர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பெருமிதத்துடன் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். 105 வயதான இந்த மூதாட்டி இயற்கை விவசாயம் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம், அரசியல் என்று சுறுசுறுப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார் பாப்பம்மாள்.
ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவையொட்டி வழங்கப்படும் பத்ம விருதுகளுக்கு பாப்பம்மாளும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வயதிலும் விவசாயத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக இந்த விருதுக்கு அவர் தேர்வாகியுள்ளார்.
ஸ்டாலின்
தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு பத்ம விருதுகள் கிடைத்துள்ளதை தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். இவருக்கும் இவரை போல் விருது பெற்ற மற்றவர்களுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை சொல்லியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கழக முன்னோடியும் 103 வயதிலும் விவசாயம் செய்யும் பூமித்தாயுமான பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்துள்ளது.
வாழ்த்து
இது அவருக்கு மட்டுமல்ல, கழகத்துக்கும் கிடைத்திருக்கும் பெருமை. அடிக்கடி என்னை வந்து சந்திப்பவர் மட்டுமல்ல, கழக போராட்டங்களிலும் முன் நிற்பவர். அவருக்கும் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஶ்ரீ விருது பெற்ற தமிழகக் கலைச்செல்வங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த கட்சி
பாப்பம்மாள் சாதனை படைத்ததற்காக இத்தனை நாட்கள் இல்லாமல் இன்று திடீரென திமுக உரிமை கொண்டாடுவதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்படும் போது மத்திய அரசு இன்னார் இந்த கட்சி, அந்த கட்சி என பார்க்கவில்லை.
|
அர்ப்பணிப்புகள்
மாறாக அவருடைய பணிகள், அர்ப்பணிப்புகள் அவற்றிக்கு மட்டுமே கிடைத்த அங்கீகாரம் இது என நெட்டிசன்கள் கூறுகிறார்கள். மேலும் அவரை கட்சி போராட்டங்களில் பங்கு பெற வைத்துவிட்டு இப்போது அரசு மரியாதை செய்தவுடன் புகழாரம் கொடுப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளார்கள். ஆனால் ஸ்டாலின் பாப்பம்மாளை மட்டும் வாழ்த்தவில்லை, கட்சி சாராத பிற விருதாளர்களையும் சேர்த்துதான் அவர் பாராட்டியுள்ளார் என திமுக தரப்பினர் தெரிவித்து வருகிறார்கள்.