ராமதாஸின் பொய்யை நம்பி முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக பாஜக செயலாளர் மனு... ஸ்டாலின் குற்றச்சாட்டு
Recommended Video
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் கூற்றை நம்பி, முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக விசாரணை கோரி ஆதி திராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில், பாஜக மாநிலச் செயலாளர் டாக்டர் சீனிவாசன் மனு அளித்திருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின், படக்குழுவினரை பாராட்டியதுடன்," அசுரம் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்" என தனது டுவிட்டர் பகத்தில் கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த பாமக நிறுவனர் ராமதாஸ்,"அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்" என குறிப்பிட்டு இருந்தார்.
விஸ்வரூபம் எடுத்த முரசொலி பஞ்சமி நில விவகாரம்.. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்
பட்டா இணைப்பு
இதற்கு பதில் அளித்த ஸ்டாலின். முரசொலி இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார். அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை. நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என கேள்வி கேட்டிருந்தார். அத்துடன், முரசொலி அலுவலகத்துக்கான பட்டாவையும் இணைத்து டுவிட்டரில் பதிவிட்டார்.
ராமதாஸ் கேள்வி
இதற்கு மீண்டும் பதில் அளித்த ராமதாஸ் "முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?
கட்டியது எப்போது
முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?
முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது? என தனது ட்விட்டர் பக்கத்தில் பாமாக நிறுவனர் கேள்வி எழுப்பியிருந்தார்.
காட்டத்தயார்
இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின்," முரசொலி நில விவகாரம் தொடர்பாக அறைகூவல் விடுத்திருந்தேன். நான் விடுத்த அறைகூவலை ராமதாஸ் ஏற்பதாக உறுதிசெய்தால், அவர் இப்போது கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்டிட நான் தயார்! அவர் நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்! நான் தயாராக இருக்கிறேன்! இந்த விவகாரத்தை திசை திருப்பாமல், அவரது வழக்கமான பாணியில் நழுவிடாமல், இந்தமுறை அறைகூவலை ஏற்பார் என எதிர்பார்க்கிறேன்" என கூறியிருந்தார்.
சீனிவாசன் மனு
இந்நிலையில் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமது அறைகூவலுக்கு பதிலளிக்காமல் ராமதாஸ் வாய் மூடி மவுனமானதாகவும், ஆனால் ஆதி திராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில் சீனிவாசன் மனு தந்துள்ளதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
பையனூர் பங்களா
ராமதாஸின் கூற்றை நம்பி, சீனிவாசன் அவருடைய நேரத்தை வீணடித்திருப்பதாகவும், இதற்குப் பதிலாக, அ.தி.மு.க. முன்னாள் தலைவி ஜெயலலிதாவால், பையனூரில் பங்களா கட்ட கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்ட பஞ்சமி நிலத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டால் ஏதாவது பலனாவது கிடைக்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிரூபிக்க வேண்டும்
முரசொலி இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்க, ராமதாஸ் முன் வருவாரா? அவரை சீனிவாசன் வலியுறுத்த முன்வருவாரா? என்றும் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.