2021 தேர்தல்.. அதிரிபுதிரியாக தயாராகும் திமுக.. தனித்துக் களம் காண ரெடியா.. வெல்லுமா, அள்ளுமா?
கொரோனா காலம் என்றாலும் சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பல தேர்தல்களை கூட்டணி கட்சிகளோடு சந்தித்துள்ள திமுக இந்த சட்டசபை தேர்தலில் தனித்து களம் காணுமா? 10 ஆண்டுகாலம் ஆட்சியை தவ
சென்னை: சட்டசபை தேர்தலுக்காக களமாட ஆரம்பித்து விட்டன அரசியல் கட்சிகள். ஆளுங்கட்சியாக இருந்தால் அடிக்கல் நாட்டுவிழா, கொரோனா நிவாரண நிதி, எதிர்கட்சியாக இருந்தால் அறிக்கை போர். மக்கள் மத்தியில் தங்களின் இருப்பை தெரிவித்துக்கொண்டே இருக்கின்றனர் அரசியல் தலைவர்கள். அதிமுக, திமுக என்ற பலம் வாய்ந்த கட்சிகள் சட்டசபைத் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் போதே யாருடன் யார் கூட்டணி என்ற கணக்குகளையும் போட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். திமுக இந்த சட்டசபைத் தேர்தலை தனித்து சந்திக்குமா? ஜெயித்து பத்து ஆண்டு காலமாக பறிகொடுத்து இருந்த ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறப் போகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் கட்சியின் மீது சூடான விமர்சனங்களை முன் வைக்க கருணாநிதி போல யாராலும் முடியாது. எதிர்கட்சிகளின் கேள்விக்கணைகளை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க ஜெயலலிதா போல யாராலும் முடியாது 30 ஆண்டு காலமாக அரசியல் பரபரப்பாகவே இருந்தது. வரப்போகும் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் திமுகவும், அதிமுகவும் 2021 சட்டசபை தேர்தலை சந்திக்கப் போகின்றன.
தேர்தல் கூட்டணி கணக்குகளை ஓராண்டுகளுக்கு முன்பே தொடங்கி விடுவார் கருணாநிதி. அதே போல ஜெயலலிதாவும் ரிஷி பஞ்சமி நாளில் ஆரம்பித்து விடுவார். மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி ஒவ்வொரு அணியாக அழைத்து செயல்வீரர்கள் கூட்டத்தை ஆரம்பித்து விடுவார்கள். இந்த ஆண்டு எந்த கூட்டமும் நடத்த முடியாது காரணம் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி எல்லோரையும் வீட்டோடு இருக்க வைத்து விட்டது.
ஸ்டாலின் பிரச்சாரம்
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்து எதிர்கட்சி வரிசையில் கூட அமர முடியாமல் போனது திமுக. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக நமக்கு நாமே பயணம் மேற்கொண்டார் ஸ்டாலின். பிரச்சார யுக்தியை மாற்றி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று கணக்குப் போட்ட ஸ்டாலினுக்குக் கிடைத்ததோ எதிர்கட்சி நாற்காலிதான். செயல் தலைவரானார் கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக தலைவரானார்.
நாடாளுமன்ற தேர்தல் 2019
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலை ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் சந்தித்தன. அதிமுக பாஜக உடன் கை கோர்த்தது. திமுகவிற்கு பாஜக எதிர்ப்பு பிரச்சாரம் கொடுத்தது. 39 தொகுதிகளை கொத்தாக அள்ளியது. அதிமுகவில் இருந்து ஒரே ஒரு எம்.பி லோக்சபாவிற்கு போனார். ஸ்டாலின் தலைமையிலான திமுகவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிதான். 2004 லோக்சபா தேர்தல் முடிவு போல திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியும் அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய தோல்வியும் கிடைத்தது.
பலம் வாய்ந்த கூட்டணி
சட்டசபைத் தேர்தலோ, லோக்சபா தேர்தலோ எந்த தேர்தல் என்றாலும் பலமான கூட்டணி அமைந்தால் மட்டுமே திமுகவினால் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடிந்திருக்கிறது. சரியான கூட்டணி அமையாவிட்டால் திமுகவினால் வெற்றியை எட்டிப்பிடிக்க முடியாமலேயே போய்விடுகிறது. அது கருணாநிதி தலைவராக இருந்த போதே திமுக தொண்டர்களுக்கு நன்றாகத் தெரியும். கூட்டணி கணக்குகளை கட்சிதமாக போட்டு காய் நகர்த்துவார். கூட்டணி கட்சித்தலைவர்களுடனும் அந்த அளவிற்கு நட்பு பாராட்டுவார் கருணாநிதி. அதே போல பலம் வாய்ந்த கூட்டணி அமைந்த காரணத்தினால் 2019 லோக்சபா தேர்தலில் வெற்றிக்கனியை ருசித்தது திமுக.
தனித்து களமிறங்குமா திமுக
2021 சட்டசபைத் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் ஸ்டாலின் தலைமையிலான திமுக பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உடன் கரம் கோர்த்துள்ளது. திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்ற ஆலோசனையை அவர்தான் கூறியுள்ளார். திமுகவிற்கு 150க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் பிரசாந்த் கிஷோர் நிறுவனம் எடுத்துள்ள சர்வேயில் தெரியவந்துள்ளதாம்.
ஸ்டாலின் முடிவு எப்படி இருக்கும்
2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போதும், 2016 சட்டசபைத் தேர்தலின் போதும் தனித்து போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றார் ஜெயலலிதா. சட்டசபையில் விஜயகாந்த் விட்ட சவாலை ஏற்று தனித்து போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். அதே நேரத்தில் 2014 லோக்சபா தேர்தலில் சரியான கூட்டணி அமையாமல் மண்ணைக்கவ்வியது திமுக. 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று பல எம்பிக்களை லோக்சபாவிற்கு அனுப்பியது.
பிகே வியூகம் பலிக்குமா
திமுகவின் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் போட்டுக்கொடுக்கும் ஸ்கெட்ச் படிதான் ஸ்டாலின் காய் நகர்த்துவார். இளைஞரணி செயலாளராக பதவி வகிக்கும் உதயநிதியும் தனது பங்குக்கு சில ஆலோசனைகளை சொல்லி வருகிறார். கூட்டணி இல்லாமல் திமுக தனித்து களமிறங்கி சட்டசபைத் தேர்தலை சந்தித்தால்தான் உண்மையான பலம் தெரியவரும். ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கையும் அறிந்து கொள்ள முடியும்.
ஆட்சியில் அமருமா திமுக
கடந்த தேர்தல்களைப் போல இல்லாமல் இந்த தேர்தலில் புதிய கட்சிகளும் களமிறங்கப்போகின்றன. கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் திமுகவிற்கு சவாலாக இருக்கும். அதே போல ரஜினி கட்சி தொடங்கினாலும் அது திமுக வாக்கு வங்கியில் சறுக்கல் ஏற்படும். பாமக, தேமுதிகவும் வட மாவட்டங்களில் வாக்குகளை பிரிக்கும். காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் கூட்டணியில் இல்லாமல் தனித்து போட்டியிட்டு திமுக வெற்றி பெற முடியுமா? ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும் என்று பத்து ஆண்டு காலமாக காத்திருக்கும் ஸ்டாலினின் கனவு நிறைவேறுமா? தமிழக மக்களின் நாடித்துடிப்பை சரியாக அறிந்து களமிறங்கினால் மட்டுமே ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியில் அமரமுடியும்.