ஸ்டாலினின் முதல் சட்டசபை கூட்டம்.. சட்டசபை கட்டிடத்தில் இல்லை.. கலைவாணர் அரங்கில்.. இதுதான் காரணம்!
சென்னை : தமிழகத்தில் முதல்முறையாக முதல்வராகி உள்ள ஸ்டாலினின் முதல் சட்டசபை கூட்டம், கொரோனா காரணமாக தமிழகத்தின் சட்டசபை கட்டிடத்தில் நடைபெறாது. சட்டசபையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு கூட்டம் , சமுக இடைவெளியுடன் நடைபெறும் என்பதால் சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. முக ஸ்டாலின் தலைமையிலான திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் முதல்வராக முதல்முறையாக பதவி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றார். இவருடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
"எங்களுக்குதான் ஓட்டு.." "உங்களால்தான் உள்ளதே போச்சு.." மாறி மாறி கொந்தளித்த எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு
சபாநாயகர் தேர்வு
இந்நிலையில் ஸ்டாலினின் ஆட்சியின் முதல் சட்டசபை கூட்டம் சென்னை கோட்டையில் உள்ள சட்டசபை அரங்கில் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு வைபவம், சபாநாயகர் தேர்வு, துணை சபாநாயகர் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
கொரோனா தொற்று பரவல் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 27 ஆயிரத்தை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் மிக உச்சமாக 250ஐ நெருங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கை முக ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். பதவி ஏற்ற மறுநாளே முழு ஊரடங்கை தமிழகத்தில் அமல்படுத்த ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதல் சட்டசபை கூட்டம்
இந்த சூழலில் கொரோனா பரவல் எம்எல்ஏக்களை பாதிக்கக்கூடாது எனில், சமூக இடைவெளியுடன் 234 எம்எல்ஏக்களின் பதவி ஏற்பு வைபவம் நடைபெற வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் சட்டசபை கட்டிடம் இல்லை. எனவே மிகப்பெரிய கூட்ட அரங்கான சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் ஸ்டாலினின் முதல் சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. 16-வது சட்டசபையின் முதல் கூட்டம் மே 16-ந் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. மே 11-ந் தேதி எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சட்டசபை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல்கள் மே 12-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் கலைவாணர் அரங்கம்
கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் கூட சென்னை கலைவாணர் அரங்கில் தான் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது. அதே பாணியில் இப்போது நடத்தப்பட உள்ளது. கலைவாணர் அரங்கம் மிகப்பெரியது மட்டுமின்றி, சட்டசபையாக நடத்துவதற்கு உரிய வசதிகளையும் அரசு முன்பே ஏற்படுத்தி வைத்திருந்தது. அதனால் நிகழ்ச்சிகளை நடத்துவது எளிதாக இருக்கும் என்பதால் அங்கு தான் நடக்க போகிறது.