பல், பவர் இல்லாத அச்சடித்த பதுமை அதிமுக.. லோக் ஆயுக்தா கூட்டத்தில் திமுக பங்கேற்காது: மு.க.ஸ்டாலின்
லோக் ஆயுக்தா கூட்டத்தில் திமுக பங்கேற்காது என மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: ஊழல் ஒழிப்புக்கு உதவாத, நாளை நடைபெற உள்ள லோக் ஆயுக்தா தேர்வு குழு கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
லோக் ஆயுக்தா அமைப்பு தலைவர் உறுப்பினர்களை தேர்வு செய்ய நாளை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக தமிழக அரசு பணியாளர், நிர்வாக சீர்த்திருத்துறை செயலாளருக்கு ஒரு கடிதமும் அவர் எழுதியுள்ளார். அதில் ஸ்டாலின் தெரிவித்துள்ள சாராம்சம் இதுதான்:
வெறும் தக்கை
"பல்லும் இல்லாத, பவரும் இல்லாத, அச்சடித்த பதுமை போன்று அசையமுடியாத செயலற்ற அமைப்பாக லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த, உள்நோக்கங்களுடன் அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது. உள்ளீடற்ற, வலிமையற்ற, வெறும் தக்கை போன்ற இப்படியொரு லோக் ஆயுக்தா அமைப்பை திமுக எதிர்க்கிறது.
அதிகாரமற்றது
வெளிப்படையான விசாரணை நடைமுறைக்கும் வித்திடாமல் லோக் ஆயுக்தா அமைப்பு அதிமுக அரசின் கூண்டுக்கிளி போல் ஆக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் அமைய இருக்கும் லோக் ஆயுக்தா அமைப்பு அதிகாரமற்றது. ஊழல் புகாருக்கு ஆளான முதல்வர், கூட்டத்தில் பங்கேற்பது ஊழல் ஒழிக்க உதவாது
லோக் ஆயுக்தா
முதல்வர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை விசாரிப்பது லோக் ஆயுக்தா. ஊழல் புகார் கொடுப்போர் அஞ்சும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.வெளிப்படையான விசாரணைக்கு வித்திடாமல் லோக் ஆயுக்தா அமைப்பு உள்ளது.
பங்கேற்காது
அதனால் நாளை நடைபெறும் இந்த லோக் ஆயுக்தாவின் தேர்வுக்குழு கூட்டத்தில் திமுக பங்கேற்க இயலாது." என்று தெரிவித்துள்ளார்