ஜெ. பாணியில் பிரச்சார யுக்தியை மாற்றிய ஸ்டாலின்.. செம ரெஸ்பான்ஸ்.. நீங்க கவனிச்சீங்களா?
Recommended Video
சென்னை: தேர்தல் பிரச்சாரம் என்றாலே ஒவ்வொரு தலைவர்களுக்கும், ஒவ்வொரு உரையாற்றும் ஸ்டைல் இருக்கும். இதற்காகவே ஒரு பெரும் ரசிகர்கூட்டம் உருவாகுவதும் உண்டு.
அறிஞர் அண்ணாவின் பேச்சைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே, நள்ளிரவு வரை கண்விழித்து காத்திருந்த முன்னோர்களை கொண்டவர்கள்தான் நாம்.
தொண்டையில் அடிபட்டிருந்தாலும், அந்த காந்தக் குரலுடன், "என் ரத்தத்தின் ரத்தங்களே .." என்று எம்ஜிஆர் உரையாற்றும் போது, ரத்தம் முழுக்க மின்சாரம் பாயும் உணர்வை பெற்றதும் இதே தமிழகத்து மக்கள் தான்.
பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்.. முன்னாள் நீதிபதிகள், துணைவேந்தர்கள் சென்னையில் திடீர் பிரஸ் மீட்
கருணாநிதி உரை
"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே.." என்று கரகரத்த கம்பீர குரலில் கருணாநிதி உரையாற்ற தொடங்கும்போது கூடியிருக்கும் மக்களிடம் உற்சாகம் பொங்கும். அந்த உற்சாகம், உரை முடிவடையும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்படி எந்த ஒரு தலைவராக இருந்தாலும், அவர்களது பிரச்சார பாணியை அறுதியிட்டுக் கூறிவிட முடியும்.
வைகோ, விஜயகாந்த் பேச்சு
வைகோவை பொறுத்த அளவில், புறநானூற்றில் ஆரம்பித்து, ஜெர்மனி, ரஷ்யா என்று போய், உள்ளூர் அரசியலில் வந்து நிற்பார். வரலாறு, பூகோளம் என அனைத்தையும் ஒரே பேச்சில் மக்களின் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி விடும் ஆற்றல் பெற்றவர் வைகோ. சமீபத்திய அரசியல்வாதிகளில் விஜயகாந்த் பேச்சு ஸ்டைல் மிகவும் வித்தியாசமானது. சாமானிய மனிதர்களின் குரலாக அவரது உரை இருக்கும். சந்திக்கும் முதல் பாலையே, பவுண்டரிக்கு விரட்ட துணியும் வீரேந்திர சேவாக் போன்ற அதிரடியுடன் தான் அவரது உரை ஆரம்பிக்கும்.
ஜெயலலிதாவின் செய்வீர்களா யுக்தி
இந்த வகையில், ஜெயலலிதா அவர் மறைவதற்கு முன்பாக சந்தித்த சில தேர்தல்களில் புதிய ஒரு பிரச்சார யுக்தியைக் கையாண்டார். பொதுக்கூட்ட பிரச்சாரம் நெடுக, திமுக, அதன் வாரிசு அரசியல் உள்ளிட்டவற்றை கடுமையாக தாக்கிப் பேசும் ஜெயலலிதா, இறுதியாக, திமுகவினருக்கு வாக்களிக்கக்கூடாது. "நீங்கள் செய்வீர்களா.." என்று பொதுமக்களை நோக்கி கேள்வி எழுப்புவார்கள். அதற்கு மக்களும், "செய்வோம்" என்று பதில் அளிப்பார்கள். கூட்டத்தில் ஒவ்வொரு திசையையும் நோக்கி, "நீங்கள் செய்வீர்களா.. நீங்கள் செய்வீர்களா" என்று ஜெயலலிதா கேள்வி எழுப்ப, அதற்கு மக்கள் பதிலளிக்க.. என அந்த இடமே ஆரவாரமாக காட்சி அளிக்கும். இது ஒரு வகையான உளவியல் தாக்கத்தை வாக்காளர்களிடம் ஏற்படுத்தியது. கூட்டத்தில் யாராவது தூங்கிக்கொண்டிருந்தாலும் அவர்களை எழுப்பி விடுவதற்கு இந்த கேள்வி-பதில் பாணி உதவியது.
நல்ல பலன்
ஜெயலலிதாவின் இந்த பிரச்சாரத்திற்கு நல்ல பலன் கிடைத்ததை, கடந்த கால தேர்தல் ரிசல்ட்டுகள் நமக்கு உணர்த்துகின்றன. இதையெல்லாம் திமுக தலைமைக்கு நெருக்கமான, தேர்தல் வியூகத்தை வகுக்க கூடிய உயர்மட்ட குழுவினர் கவனிக்காமலில்லை. எனவேதான் ஸ்டாலின் தனது பிரச்சார பாணியை, மாற்றியுள்ளார் என்று கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சத்தியம்
ஸ்டாலின் தனது பிரச்சார கூட்டங்கள் அனைத்திலும் தவறாமல் இப்போது பேசக்கூடிய ஒரு வார்த்தை சத்தியம் என்பது. திமுகவுக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா என்று கூட்டத்தினரை நோக்கி கேள்வி எழுப்பும் ஸ்டாலின், அவர்கள் "ஆம்" என்று பதில் வந்ததும், "நிச்சயமாக..?" என்று பதில் கேள்வி எழுப்புகிறார். அதற்கும் கூட்டத்தினர் "நிச்சயமாக" என்று பதிலளிக்கிறார்கள். இதன் பிறகு "உறுதியாக..?" என்று அடுத்த கேள்வியை முன்வைக்கிறார். அதே பதிலை மக்கள் திருப்பி சொன்னதும், "சத்தியமாக..?" என்று அடுத்ததாக ஒரு கேள்வியை முன்வைக்கிறார். மக்களும் பதிலுக்கு, "சத்தியமாக" என்று கூறுகிறார்கள். இதுதான் ஸ்டாலின் பிரச்சாரத்தின் புதிய யுக்தியாக பார்க்கப்படுகிறது.
புதிய வியூகம்
இதுவும் ஜெயலலிதாவை போலவே "நீங்கள் செய்வீர்களா" பாணியிலான கேள்வி-பதில் வகையைச் சேர்ந்த பிரச்சார உத்தி தான். அதிலும் சத்தியம், என்ற வார்த்தை மிகவும் பவர்புல்லானது. தமிழக மக்கள் சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர்கள். சத்தியம் என்ற சொல்லை எளிதாக யாரும் பயன்படுத்துவது கிடையாது. அந்த பிரம்மாஸ்திரத்தைதான் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். சத்தியம் செய்து கொடுத்த மக்கள் திமுகவை வாக்களிப்பார்கள் என்று அவர் நம்புகிறார். ஸ்டாலினுக்கு மக்கள் செய்து கொடுத்த சத்தியம் என்ன ஆனது என்பது மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரிந்துவிடப் போகிறது.. அப்படித்தானே!