சங்கர் மறைவு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு பேரிழப்பு- மு.க.ஸ்டாலின் வேதனை
சென்னை: ஐஏஎஸ் அகாதமி நிறுவனர் சங்கர் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை அண்ணாநகரில் சங்கர் ஐஏஎஸ் அகாதமி எனும் பயிற்சி மையத்தை வைத்து நடத்தி வந்தவர் சங்கர். இவர் குடும்ப சூழல் காரணமாக நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஸ்டாலின் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளாக நினைக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்த சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் திடீரென்று மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கும், அவரை நம்பியிருந்த எண்ணற்ற இளைஞர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
[ என்ன நடவடிக்கை எடுக்கலாம்?.. எச். ராஜா கேள்வி ]
நாட்டின் நிர்வாக கட்டமைப்புக்கு தேவையான ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என பல அரசு அதிகாரிகளை உருவாக்கி, தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் வெற்றிகரமாக ஐ.ஏ.எஸ் அகாடமிகளை நடத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய அவரது மறைவு, இளைஞர்களுக்கும், கிராமங்களில் இருந்து அகில இந்திய தேர்வுகளை எழுத விரும்பிய ஏழை எளிய மாணவர்களுக்கும் பேரிழப்பாகும்.