திமுக அடித்த பல்டி.. 370 நீக்கியது தவறு என்று நாங்கள் போராடவில்லை.. குவியும் விமர்சனங்கள்!
காஷ்மீர் விவகாரம் குறித்து முக ஸ்டாலின் புது விளக்கம் அளித்துள்ளார்
Recommended Video
சென்னை: டெல்லி போராட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், "நாங்கள் ஒன்றும் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது தவறு என்று டெல்லியில் போராடவில்லை. கையாண்ட விதம்தான் தவறு என்றுதான் போராடினோம்" என்று காஷ்மீர் விஷயத்தில் முக ஸ்டாலின் திடீர் பல்டி அடித்து பேசியிருப்பது பெரும் சர்ச்சை நிறைந்த குழப்பத்தை அரசியல் களத்தில் ஏற்படுத்தி உள்ளது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த வாரம் நீக்கி நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டது.
எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்தன.. குரல் கொடுத்தன.. கண்டனம் தெரிவித்தன.. ஆனால் யாருமே இறங்கி போராட துணியவில்லை.
அறிவிப்பு
அந்த விஷயத்தில் திமுகவை பாராட்ட செய்யலாம். ஆரம்பத்தில் இருந்தே இந்த மசோதாவை எதிர்த்து வந்ததுடன், அதன் தீவிரத்தை வெளிப்படுத்த டெல்லியில் போராட்டம் நடத்தியது. அத்துடன் திமுக கூட்டணி கட்சியினரும் இதில் கலந்து கொள்வார்கள் என்ற அறிவிப்பினையும் செய்தது.
பங்கேற்கவில்லை
திட்டமிட்டபடியே நேற்று முன்தினம் இந்த போராட்டத்தை நடத்தியது. ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் ஆவேசமாக பேசி, கருத்துக்களை முன் வைத்த திமுக தலைவர் ஸ்டாலினே இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது.
ப.சிதம்பரம்
திமுக எம்பி., டிஆர் பாலு தலைமையில் இந்த போராட்டம் நடந்து முடிந்தது. முதலில் இந்த கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்வதாகதான் இருந்தது. ஆனால், ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை அன்றையதினம், சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் தமக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இந்த போராட்டத்தை தவிர்த்தாரா என்றுகூட சோஷியல் மீடியாக்களில் கேள்விகளை கேட்டு வந்தனர்.
அடுத்த பகீர்
இந்த சலசலப்புக்கு மத்தியில் இன்னொரு பகீர் கருத்தை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். நேற்று சென்னையில் ஒரு கல்யாணத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், "காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது தவறு என்று டெல்லியில் போராடவில்லை. கையாண்ட விதம்தான் தவறு. முறையாக இந்த சட்ட நீக்கம் அமல்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டவே போராடினோம்" என்று சொல்லி உள்ளார்.
அந்தர் பல்டி
370-வது சட்டப்பிரிவை நீக்கியதற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தது திமுகதான்... பாகிஸ்தான் ரேடியோவரை பேசப்பட்டதும் திமுக போராட்டம்தான்.. ஆனால், இப்போது திடீரென இந்த சட்டத்தை நீக்கியதற்கு போராடவில்லை ஸ்டாலின் கூறி, திடீர் பல்டி அடித்திருப்பது பல குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஏன் குழப்பம்?
அப்படியானால் நீக்கத்தை திமுக ஆதரிக்கிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. வாய் தவறி ஸ்டாலின் பேசி விட்டாரா அல்லது மனதில் உள்ளதை அவர் வெளிப்படையாக பேசி விட்டாரா.. திமுக ஏன் இதில் குழப்பமான கருத்தைக் கொண்டுள்ளது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.