தேர்வு முறைகேட்டை மறைக்க ஆளாய் பறக்கிறது அதிமுக அரசு... மு.க.ஸ்டாலின் பரபரப்பு புகார்
சென்னை: குரூப் 1 தேர்வு முறைகேடுகளை மூடி மறைத்து, ஆளும்கட்சிக்கு சார்பாக ஆட்டம் போட்ட அடாவடி நபர்களைக் காப்பாற்ற அதிமுக அரசு முயற்சி செய்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த ஊழல்கள் குறித்த செய்திகள் தினமும் நாளிதழ்களில் வெளியாகி வரும் நிலையில், அதனை பார்த்து வெட்கித் தலைகுனிய வேண்டிய ஆட்சியாளர்கள் நாணமின்றி நடமாடி வருகிறார்கள் என விமர்சித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
திண்டுக்கல் சீனிவாசன் மட்டுமல்ல.. அதிமுகவில் பல அமைச்சர்கள் அப்படித்தான்.. முக ஸ்டாலின் சுளீர்!
குற்றச்சாட்டு
இந்த ஆட்சியின் தேர்வாணைய ஊழலுக்கு முழு முதல் உதாரணமாகச் சொல்ல வேண்டியது குரூப் 1 தேர்வில் நடந்த முறைகேடு ஆகும். இந்த ஊழலை அப்படியே மறைக்க தமிழக அரசு ஆலாய்ப் பறக்கிறது. ஆளும்கட்சிக்கு சார்பாக ஆட்டம் போட்ட அடாவடி நபர்களைக் காப்பாற்ற நினைக்கிறார்கள் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்ட விரும்புகிறேன். குரூப் 1 தேர்வில் நடந்த அனைத்து முறைகேடுகளும் விரைவில் வெளிச்சத்துக்கு வர வேண்டும்.
தோல்வி
யாரோ ஒரு மாணவர், இம்மாதிரியான முறைகேட்டில் இறங்க முயற்சித்ததாகவும், அதில் தோல்வி அடைந்த காரணத்தால், விரக்தியால் இப்படிப்பட்ட தகவல்களைப் பரப்பி, தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு விடைத்தாளைத் தயாரித்து அனுப்பியதாகவும் சொல்லி, இந்த வழக்கை மூடி முடித்து வைப்பதற்கு தமிழக அரசு முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
பொய்யாக நடிப்பு
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த ஊழல்கள் குறித்த செய்திகள் தினமும் நாளிதழ்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ ஆகியவை குறித்த செய்திகளை வெளியிட்டு, ' தமிழக அரசு நியாயமாக நடவடிக்கை எடுத்து வருகிறது' என்ற மாயமானதும், பொய்யானதுமான தோற்றத்தை உருவாக்கிட அரும்பாடுபட்டு வருகிறார்கள். 2017ம் ஆண்டு சென்னை மத்தியக்குற்றப்பிரிவு விசாரித்து, சேகரித்த உண்மைகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
விசாரிக்க வேண்டும்
தேர்வு முறைகேடு தொடர்புடைய பிரச்சினையில் தொடர்புடைய மனிதநேயம், அப்போலோ நிறுவனங்கள், விருப்பு வெறுப்பின்றி நியாயமாகவும் முழுமையாகவும் விசாரிக்கப்பட வேண்டும். 'டி என் பி எஸ் சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் தான்' என்று உலக மகா யோக்கியர் போலப் பேட்டி தரும் அமைச்சர் ஜெயக்குமார், உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர முன்வருவாரா ?.