புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக 5000 ரூபாய் வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
சென்னை: 2015 பெருவெள்ளத்திற்கு பிறகும் அதிமுக அரசு பாடம் கற்கவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், மழை - வெள்ளம் - புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி ரொக்க நிவாரணமாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ரெயின் கோட்டை போட்டுக்கொண்டு.. அதிரடியாக இறங்கிய ஸ்டாலின்.. முதல்வரும் விடவில்லையே.. செம கெத்து!
2 நாட்கள்
"நிவர்" புயலால் மழை பாதிப்பிற்கு உள்ளான கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், துறைமுகம், எழும்பூர் ஆகிய தொகுதிகளை நேற்றும், ராயபுரம், ஆர்.கே.நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளை இன்றும் என, 11 சட்டமன்றத் தொகுதிகளில், உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி, இரு தினங்களாக மக்களைச் சந்தித்துள்ளேன்.
மக்கள் குமுறல்
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்கும் போது, கடந்த கால புயல் மற்றும் டிசம்பர் 2015 பெருவெள்ளத்திலிருந்து எவ்வித பாடத்தையும் அ.தி.மு.க. அரசு கற்றுக் கொள்ள வில்லை என்று பொதுமக்கள் ஒரே குரலில் சொன்னதையும் கேட்க முடிந்தது.
மனம் கூசாமல்
தாழ்வான பகுதிகள்- முக்கியச் சாலைகள் எல்லாமே தண்ணீரில் மூழ்கி, கடல் போல் காட்சியளிக்கின்ற நேரத்தில், "எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் மழை நீர் தேங்கவில்லை" என்று மலையளவு பொய்யை மனம் கூசாமல் முதலமைச்சரும் - அ.தி.மு.க. அமைச்சர்களும் கூறி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஒளித்து வைத்து
"கணக்கு" காட்டுவதற்காகத் தூர் வாராமல் - மழைநீர்க் கால்வாய்களை ஒழுங்காகத் தூர் வாரியிருந்தால் கூட சாலைகளில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்த்திருக்க முடியும். 2015 பெருவெள்ளத்தின் போது அ.தி.மு.க. அரசின் தோல்விகள் பற்றி தனியாக சி.ஏ.ஜி. ஒரு அறிக்கையே கொடுத்தது. மார்ச் 2016-ல் அளித்த அறிக்கையை இரு ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டமன்றத்திலேயே வைக்காமல், ஒளித்து வைத்திருந்தது அ.தி.மு.க. அரசு.
குற்றச்சாட்டு
அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட குறைகளை - எதிர்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஆக்கபூர்வமான ஆலோசனைகளை, இன்றளவும் அ.தி.மு.க. அரசு களையவுமில்லை; கடைப்பிடிக்கவுமில்லை; பெருவெள்ளத்தைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் செவிமடுத்து, நடைமுறைப்படுத்தவில்லை.
அலட்சியம் கூடாது
கடந்த காலங்களில் "கஜா புயல்" "2015 பெரு வெள்ளம்" போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கைவிட்டது போல், இந்த நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களையும் கைவிடும் நோக்கில், அ.தி.மு.க. அரசு ஏனோதானோ என்ற முறையில் செயல்படக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.