ஆத்திரத்தில் பேசுகிறார் முதலமைச்சர்... தன்னை ஜெயலலிதாவை போல் நினைக்கிறார்... ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒரு முதலமைச்சர் பேசக் கூடாதவற்றையெல்லாம் பேசுவதாகவும், மக்கள் அவரை புறக்கணிக்க தயாராகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுகவில் புதிதாக இணைந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய போது அவர் பேசியதாவது;
ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் ஒன்றிணைவோம்... நெஞ்சம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள் -காதர் மொகிதீன்
மக்கள் கூட்டம்
திமுகவில் உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லை. யார் எந்த சாதி என்ற பேதம் இல்லை. யார் எந்த மதம் என்ற பிரிவினை இல்லை. ஏழை - பணக்காரர், கிராமத்தார் - நகரவாசி என்ற ஏற்றத்தாழ்வு இல்லை. நாம் அனைவரும் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள், அதனையும் தாண்டி மனிதாபிமானம் கொண்ட மனிதர்கள் என்ற ஒற்றை நோக்கம் கொண்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அதனால் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து இணைகிறார்கள்.
முதல்வர் கோபம்
இப்படிக் கூட்டம் கூட்டமாகக் கழகத்தை நோக்கி புதியவர்கள் ஈர்க்கப்படுவதைப் பார்த்து முதலமைச்சர் பொறாமைப்படுகிறார். எந்தச் சூழலிலும் திமுக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறதே என்று வேதனைப்படுகிறார். இந்த கொரோனா காலத்திலும் மக்களுக்குச் சேவை செய்து நல்ல பெயர் வாங்கி விட்டார்களே என்று கோபப்படுகிறார்.
பாவங்கள் மட்டும்
இந்த பொறாமையும், வேதனையும் கோபமும் அவருக்கு என்ன பேசுகிறோம் என்று தெரியாத அளவுக்கு அவரை ஆத்திரத்தில் உளற வைக்கிறது. என்னென்னவோ பேசுகிறார். ஒரு முதலமைச்சர் என்ன மாதிரி பேசக் கூடாதோ அந்த மாதிரி எல்லாம் பேசுகிறார். என்னை ஆண்டவன் கவனித்துக் கொள்வார் என்று தூத்துக்குடியில் போய் சொல்லி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியைப் போல பாவங்களை மட்டுமே செய்து கொண்டிருப்பவனல்ல நான். அதனால் அவர் தான் பயப்பட வேண்டுமே தவிர நான் பயப்படத் தேவையில்லை.
மமதை
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தல்தான் அவரது தொழில். தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எத்தகைய துரோகத்தையும் யாருக்கும் செய்யத் தயங்காதவர் பழனிசாமி. தனக்கு எல்லாம் தெரியும் என்பதைப் போலவும், தான் வைத்ததுதான் சட்டம் என்பது போலவும் நடந்து கொள்கிறார். தன்னை ஏதோ ஜெயலலிதா போலவே நினைத்துக் கொள்கிறார்.
விமர்சனம்
ஜெயலலிதா சாலையில் பயணம் செய்யும் போதுகூட கடைகளை மூடச் சொல்வது இல்லை. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னால் தூத்துக்குடி சென்ற பழனிசாமி பயணம் செய்யும் பாதையில் கட்டாயப்படுத்தி கடையை மூட வைத்துள்ளார்கள். சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு உள்ள கடைகள் மூன்று மணி நேரம் மூடப்பட்டதற்கு என்ன காரணம்?தன்னை ஏதோ பெரிய அதிகாரம் பொருந்தியவராக நினைத்துக் கொள்கிறாரா? அல்லது யாராவது மக்கள் வந்து கருப்புக் கொடி காட்டிவிடக் கூடாது என்று பயந்தாரா என்னவோ தெரியவில்லை.
இவ்வாறு ஸ்டாலின் காணொலி மூலம் உரையாடிய போது குறிப்பிட்டார்.