நகர்ப்புறங்களில் வீசிய கொரோனா அபாய அலை... கிராமப்புறங்களில் வீசத் தொடங்கிவிட்டது -மு.க.ஸ்டாலின்
சென்னை: நகர்ப்புறங்களில் வீசிய கொரோனா அபாய அலை கிராமப்புறங்களில் வீசத் தொடங்கிவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசை எச்சரித்துள்ளார்.
சென்னையில் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் பனிப்போர் ஏற்பட்டுள்ளதால் கொரோனா தடுப்பு பணிகள் தடுமாறி நிற்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
படு மோசம்.. கொரோனா பார்ட்டி நடத்தும் மாணவர்கள்.. அமெரிக்காவின் விபரீதமான விளையாட்டு.. ஷாக்!
அதிர்ச்சி அளிக்கிறது
மக்கள் நல்வாழ்வுத் துறையின் நேற்றைய செய்திக்குறிப்பில், 'கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை' இந்த நோயின் அலை நமது கிராமங்களில் வீசத் தொடங்கியிருப்பதைக் காட்டுகிறது. தமிழ்நாடு முழுவதும் நோய்த் தொற்றுக்குள்ளான நேற்றைய எண்ணிக்கை 4343 பேர். அதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள்- அதாவது 2322 பேர், சென்னை தவிரப் பிற மாவட்டங்களில் இந்த நோய்க்குள்ளாகியிருக்கிறார்கள் என்பது மிகுந்த அதிர்ச்சியும் கவலையுமளிக்கிறது.
சமூகப் பரவல்
'19 பேருக்கு வந்த நோய்த் தொற்றுக்கு யார் காரணம்' என்று கண்டுபிடிக்க முடியாத சூழலிலேயே, கேரளாவில் சமூகப் பரவல் என்று செய்திகள் வருகின்ற நிலையில், அமைச்சர் திரு. விஜயபாஸ்கரும், முதலமைச்சர் திரு. பழனிசாமியும் 'நோய்த் தொற்று நிபுணர்கள் மட்டுமே அடங்கிய' ஒரு குழுவினைக் கூட அமைக்காமல்- இவர்களாகவே "சமூகப் பரவல் இல்லை" என்று 'சான்றிதழ்' அளித்து, மக்களை அபாயத்தில் தள்ளி வருகிறார்கள்.
எதுவும் நடக்காதது போல்
கிராமப்புறங்கள் அடங்கிய தமிழகத்தின் பிற மாவட்டங்களில், இந்த நோய் மிக மோசமாகப் பரவி வருகின்றது என்பதை அரசின் புள்ளிவிவரங்களே சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது. 'எதுவுமே நடக்காதது போல்' 'எல்லாமே நாங்கள் முறையாகச் செய்கிறோம்' என்று, ஒரு மணல் கோட்டையைக் கட்ட இனியும் இந்த அரசு நினைக்கக் கூடாது. கிராமங்களில் தொடங்கியுள்ள 'கொரோனா அலை' பற்றி எதுவுமே தெரியாதது போல், மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவரான திரு. பழனிசாமி அவர்கள் இன்னும் இருப்பது கண்டனத்திற்குரியது.
ஆபத்தான கட்டம்
நோய்த் தொற்றுப் பரவல் அதுவாகவே தணியட்டும்; அப்போது நம்மால்தான் தடுக்கப்பட்டுத் தணிந்தது, குறைந்தது என்று புகுந்து பெயர் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்து; உடனடியாகத் திட்டமிட்டு எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்தால், ஆபத்தான கட்டத்தை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாது என்பதை உணர வேண்டும். இதை நான் விடுக்கும் எச்சரிக்கையாகக் கொண்டு, மக்களைக் காப்பாற்ற அரசு முன்வர வேண்டும் என விரும்புகிறேன்.