எப்பவும் நாங்க இப்படித்தான் இருப்போம்.. இப்படித்தான் செயல்படுவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி வீடியோ
சென்னை: திமுக ஆட்சி அமைந்து 4 மாதங்களில் 202 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
தேர்தலுக்கு முன்பு திமுக வழங்கிய வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தபிறகு நிறைவேற்றவில்லை என்பது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தொடர் குற்றச்சாட்டாக இருக்கிறது. பாஜக தலைவர்கள் பலரும் இதே போன்ற குற்றச்சாட்டை அரசின் மீது முன்வைக்கிறார்கள்.
நீட் நுழைவுத்தேர்வு ரத்து, நகை கடன் தள்ளுபடி போன்ற விஷயங்களை திமுக அரசு இன்னமும் நிறைவேற்றவில்லை என்பது அவர்கள் குற்றச்சாட்டாக இருக்கிறது.
2 மேட்டர்கள்.. கியரை மாற்றும் முதல்வர் ஸ்டாலின்.. 'அவங்களுக்கு' முக்கிய பதவியாமே? குஷியில் திமுக
உள்ளாட்சித் தேர்தல்
9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திலும் திமுக மீது எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக இந்த குற்றச்சாட்டை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இன்று காலை வீடியோ வெளியிட்டுள்ளார்.
நெஞ்சை நிமிர்த்தி பேசுகிறேன்
அந்த வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: மக்களாகிய நீங்கள் வாக்கு அளித்த காரணத்தால் தான் நான் முதலமைச்சர் பொறுப்பில் அமர்ந்து இருக்கிறேன். நீங்கள் வழங்கிய ஒவ்வொரு வாக்கும் நான் இன்று கோட்டையில் உட்காருவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இவர்களுக்கு வாக்களித்தால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள், மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்வார்கள் என்று நம்பி ஓட்டு போட்டீர்கள். நீங்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை இம்மி பிசகாமல் காப்பாற்றி கொண்டிருக்கிறோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும்.
கருணாநிதி பாணி
நீங்கள் எங்களுக்கு வாக்களித்தீர்கள், நாங்கள் உங்களுக்கு கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். அதனால் தான் உங்கள் முன்பாக தைரியமாக பேசுகிறேன். தேர்தல் அறிக்கையை நாங்கள் வெளியிட்ட போது கருணாநிதி பாணியில் சொல்வதை செய்வோம் செய்வதை தான் சொல்வோம் என்று சொன்னேன். ஆட்சிக்கு வந்து இன்றுடன் நான்கு மாதங்கள் தான் கடந்துள்ளன. இந்த நான்கு மாதங்களுக்குள் சொன்னதில் பெரும்பாலானவற்றை செய்துவிட்டோம்.
505 வாக்குறுதிகள்
505 வாக்குறுதிகளை கொடுத்தோம் அதில் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். மே 7-ஆம் தேதி பதவியேற்ற சில மணி நேரத்தில் ஐந்து முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டேன். 2 கோடியே 9 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூபாய் 4 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும், மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம், மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவினத்தை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் அரசு ஏற்பு ஆகிய இந்த ஐந்து உத்தரவுகளில், முதல் நான்குமே திராவிட முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.
வேளாண்மை பட்ஜெட்
இதன் தொடர்ச்சியாக உழவர்கள் வேளாண்மை உற்பத்தியை பெருக்கவும் , விவசாயிகள் நலனை பாதுகாக்கவும் முதன்முறையாக வேளாண்மைத்துறைக்கு என்று தனியாக ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்துகிறோம். நமக்கு நாமே திட்டத்தை உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து 100 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்கிறோம். இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் என்ற உன்னத திட்டம் நடப்பாண்டு செயல்படுத்தப்படுகிறது.
வழக்குகள் வாபஸ்
அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைக்கப் படுகிறது. மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்ல கூடிய வீரர்களுக்கு 3 கோடி ரூபாய், வெள்ளி பதக்கம் வெல்ல கூடிய வீரர்களுக்கு 2 கோடி ரூபாய் மற்றும் வெண்கல பதக்கம் வெல்ல கூடிய வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்குதல், பத்திரிக்கையாளர்கள், இந்திய குடியுரிமை சட்ட திருத்தம், மீத்தேன் , நியூட்ரினோ, கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் எட்டுவழிச்சாலை திட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது போடப்பட்ட 5570 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. 3 வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவை சட்டசபையில் தாக்கல் செய்தல் மற்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இவ்வாறு தமிழக அரசு செய்துள்ள பணிகள் குறித்து விரிவாக வீடியோவில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
3 மாதங்கள் ஒருமுறை பட்டியல்
மேலும், சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்து கொடுத்து விட்டோம். 4 மாசத்துக்குள்ள 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டிய அரசு, இந்திய துணைக் கண்டத்திலேயே திமுக அரசாகத்தான் இருக்கும். இதனை ஏதோ ஆரம்ப வேகம் என்று நினைக்க வேண்டாம். எப்பவும் நாங்க இப்படித்தான் இருப்போம். எல்லா நாளும் இப்படித்தான் செயல்படுவோம். மூன்று மாசத்துக்கு ஒரு முறை நானே உங்ககிட்ட வந்து நிறைவேற்றிய வாக்குறுதிகளை இப்படி பட்டியல் போட்டு சொல்வேன். வாக்களித்த மக்களை ஐந்து ஆண்டுகள் கழித்து தானே பார்க்க போறேன் என்று அலட்சியமாக இருக்க மாட்டோம். ஏனெனில் என்னை இயக்குவது மக்களாகிய நீங்களும், எனது மனசாட்சியும் தான். நீங்கள் உத்தரவிடுங்கள், உங்களுக்காகவே உழைக்க காத்திருக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.