தேர்தலை சந்திக்கத் தயார்... ஆனால் முறையாக நடத்த வேண்டும் -மு.க.ஸ்டாலின்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கத் தயார் என்றும், ஆனால் முறைப்படி தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், உச்சநீதிமன்றத்தில் உண்மையை மறைத்து தமிழக அரசு இந்த தேர்தலை நடத்துவதாக அவர் விமர்சித்தார்.
மக்களை சந்திக்க எந்தக்காலத்திலும் திமுக அஞ்சியதில்லை என்றும், அது அதிமுகவுக்கு தான் ஏற்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம்
உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை நடத்தக் கூடாது என்பது திமுகவின் வாதம் அல்ல என்றும், இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். சட்டவிதிமுறைப்படி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா என்பதே கேள்வி என்றும், அதை முறைப்படுத்தக் கோரி தான் திமுக வழக்கு தொடர்ந்ததாகவும் கூறினார்.
சாடல்
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உண்மையை மறைத்து இந்த தேர்தலை நடத்துவதாகவும், இருப்பினும் தேர்தலை சந்திக்க திமுக தயாராகவே உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் போன்றோருக்கு எதைச் சொல்லி இதை புரியவைப்பது எனத் தெரியவில்லை என்றார்..
தேர்தல் ஆணையம்
உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை பின்பற்றி முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும், அதனை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஸ்டாலின் மறுப்பு
உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக வழக்குத் தொடர்ந்துள்ளதாக அதிமுக தரப்பில் புகார் கூறப்பட்டு வரும் நிலையில், அதனை திடமாக மறுத்துள்ளார் ஸ்டாலின். தேர்தல் வேண்டாம் என எந்த இடத்திலும் திமுகவின் மனுவில் குறிப்பிடவில்லை என்றும், முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்பதே வாதம் என விளக்கினார்.