பேரணி அல்ல இது ''போர் அணி''... பேரணி நிறைவில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
Recommended Video
சென்னை: குடியுரிமைச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெறும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி நிறைவு நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக இன்று நடத்தப்பட்டது பேரணி மட்டுமல்ல ''போர் அணி'' என்றும் ஸ்டாலின் ஆவேசம் காட்டினார்.
ஸ்டாலின் பேச்சு
குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகே தொடங்கிய பேரணி சுமார் 11.30 மணியளவில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நிறைவு பெற்றது. அப்போது மத்திய மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஸ்டாலின் பேசினார்.
''போர் அணி''
குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி இன்றைய தினம் நடந்தது பேரணி மட்டுமல்ல, இது ''போர் அணி''யும் கூட என ஸ்டாலின் தெரிவித்தார். இதைக்கேட்டு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கரவொலி எழுப்பி அந்தக் கருத்தை வரவேற்றனர்.
திட்டவட்டம்
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை ஏதோ பெயருக்கு நடத்திவிட்டு ஓய்ந்துவிடமாட்டோம் என்றும், இது முதற்கட்ட போராட்டம் தான் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். அந்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற்றுக் கொள்ளும் வரை போராட்டம் ஓயாது என உறுதியளித்தார்.
பெரியளவில்
அடுத்தக்கட்டமாக அனைத்துக்கட்சிகளையும் ஒருங்கிணைத்து, இன்னும் பெரியளவில் திமுக போராட்டங்களை முன்னெடுக்கும் என ஸ்டாலின் கூறினார். தனது தந்தையின் போர்க்குணம் தன்னிடமும் இருப்பதை ஸ்டாலின் நிரூபித்துவிட்டார் என கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பெருமைத் தெரிவித்தனர்.