கருணாநிதி பிறந்தநாள்... ஆடம்பர நிகழ்ச்சிகள் வேண்டாம் -மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் 97-வது பிறந்தநாள் நாளை வரும் நிலையில், ஆடம்பர நிகழ்ச்சிகள் வேண்டாம் என கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
திமுகவினர் அவரவர் இடங்களிலேயே கருணாநிதியின் சிலைகளுக்கும், படங்களுக்கும் மரியாதை செலுத்தினால் போதுமானது என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
''நம் உயிருடன் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்தநாளான நாளை (ஜூன் 3) அனைத்து மாவட்ட-ஒன்றிய-நகர- பகுதி - வட்ட - பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள் அவரவர் இடங்களிலேயே தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கும் - திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறேன்''.
''கொரோனா பரவலால், குறிப்பாக சென்னையில் தலைவர் கலைஞர் பிறந்தநாளுக்கான எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம். கழகத் தலைவர் பொறுப்பில் உள்ள நான் தலைவர் கலைஞருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்விலும் யாரும் அணிதிரண்டிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்''.
Exclusive: காரிலேயே பிரச்சனைகளை பேசி தீர்த்துடுவார்... கருணாநிதி பற்றி சிலாகிக்கும் சண்முகநாதன்
''ஏற்கனவே அறிவித்ததற்கிணங்க நலத்திட்ட உதவிகளை கழக நிர்வாகிகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவரவர் இடங்களிலிருந்தே சமூக ஒழுங்கினைக் கடைப்பிடித்து, தலைவர் கலைஞர் அவர்களுக்கு மரியாதை செலுத்தியும் உதவிகள் செய்தும் தலைவர் கலைஞரின் புகழ் போற்றுவோம்''.