பங்காளி என்றால் ஆண்கள் என்றிருந்த சூழலில்.. பெண்களையும் 'பங்காளி' ஆக்கியவர் கருணாநிதி -மு.க.ஸ்டாலின்
சென்னை: பெண்களின் உரிமைகளைக் காத்திட மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு எனும் உச்சநீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை தடையின்றி நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
திருச்சி ரயில்வே பணிமனையில் 500 பேரில் 450 பேர் வடமாநிலத்தவர்.. திருநாவுக்கரசர் எம்பி கடும் கண்டனம்
சம உரிமை
குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை வழங்கும் சட்டத்தைத் தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக அரசு நிறைவேற்றி, இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தது.வர்ணாசிரமம் - மனுஸ்மிருதி போன்றவற்றைக் காரணம் காட்டி பெண்களுக்கான சொத்துரிமை காலம் காலமாக மறுக்கப்பட்டு வந்த சமுதாயத்தில், ஆணுக்கு இணையாகப் பெண்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற குரலைச் சீர்திருத்தச் சிந்தனையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்தே இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதற்கான சட்டம் நிறைவேற்றப்படவில்லை.
பழமைவாதம்
நமது அரசியல் சாசனத்தை உருவாக்கிய மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள், சுதந்திர இந்தியாவில் சளைக்காமல் போராடினார். நாடாளுமன்றத்தில் இந்து வாரிசு உரிமைச் சட்டத்தை உள்ளடக்கிய இந்து நடைமுறைச் சட்டத் தொகுதியை (Hindu Code Bills) நிறைவேற்றுவதற்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள், தொலைநோக்குடையவை - உறுதியானவை - உரிமைக் குரலாக ஒலித்தவை. எனினும், பழமைவாதம் மாறாத - மதவாத அரசியல் சக்திகள் அதனைத் தடுத்தே வந்தன.
வாரிசுரிமைச் சட்டம்
மனைவி - மகள் - அடிமைகள் இவர்களுக்குச் சொத்துரிமை கிடையாது என்கிற பழைய விதிகளை மீறக்கூடாது எனக் குறுக்கே நின்றன. அதனால், டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தனது அமைச்சர் பதவியையே துறந்தார் என்பது சமூகநீதிப் போராட்டத்தின் வரலாறு. பல தடைகளைக் கடந்து 1956-ம் ஆண்டில் இந்து வாரிசுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அது முழுமையானதாக நிறைவேற்றப்படவில்லை. குடும்பச் சொத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்குவதில் பல சிக்கல்கள் நீடித்தன.
பெண்கள் பங்காளி
இந்நிலையில்தான், 1989-ல் பரம்பரைக் குடும்பச் சொத்தில் மகன்களுக்கு இருக்கும் உரிமை போலவே, மகள்களுக்கும் உண்டு என்பதைச் சட்டமாக்கி, பெண்களுக்குச் சம உரிமை வழங்கினார் தலைவர் கலைஞர் அவர்கள். பங்காளி என்றால் அது ஆண்களுக்கு மட்டுமே உரிய சொல்லாக இருந்து வந்த நிலையில், குடும்பச் சொத்து எனும் பங்கை ஆள்வதில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்கிற சட்டத்தின் மூலம் அவர்களையும் ‘பங்காளி' ஆக்கி, ஆண்டாண்டு காலப் பழியைத் துடைத்தெறிந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
வலியுறுத்தல்
இந்திய நாடாளுமன்றம் - சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் நிறைவேறாத நிலை இன்னும் நீடித்துக் கொண்டிருப்பது, இந்திய சமுதாயத்திற்கே பின்னடைவாகும் . முக்கியமான அந்தக் குறிக்கோளை நிறைவேற்றிட, மத்திய பா.ஜ.க. அரசு தனது பெரும்பான்மை பலத்தை மிகவும் ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்திட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஸ்டாலின் உறுதி
பெண்களின் உரிமைகளைக் காத்திட மத்திய - மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் துணை நிற்கும் என்பதையும், இத்தருணத்தில் உறுதிமொழியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.