தமிழக இளைஞர்கள் வேலையிழந்து விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள்... மு.க.ஸ்டாலின் வேதனை..!
சென்னை: தமிழக இளைஞர்கள் வேலையிழந்து விரக்தியின் விளிம்பில் நிற்பதாகவும் அவர்கள் கோபத்துக்கு ஆளாகிட வேண்டாம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதலீடு விவகாரத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக சொன்ன 'அம்புலி மாமா' கதையையே திரும்பத் திரும்ப சொல்வதாக முதலமைச்சரை அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
விரக்தி
ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு விதத்தில் வேலை இழப்பு நேர்ந்து - தங்களின் குடும்ப வருமானத்தை இழந்து விட்டு - கொரானோ நோய்த் தொற்றின் அச்சத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைச் சமாளிக்கவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் ரொக்கமாகக் கொடுத்து உதவிட வேண்டும் என்று பலமுறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தியும் - அதை எடப்பாடி அ.தி.மு.க. அரசு ஏற்க மறுத்து - வழக்கமாக "கமிஷன்" அடிக்க உதவும் டெண்டர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.
நடவடிக்கை இல்லை
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை - குறிப்பாக, கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்கப் பரிந்துரைகளை அளிக்குமாறு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு குழுவினை அ.தி.மு.க. அரசு அமைத்தது. 250 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அந்தக்குழு முதலமைச்சரிடம் அளித்து ஒரு மாதத்தை நெருங்கி விட்டது. ஆனால் அந்த அறிக்கையை, மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக, வெளியிடவும் இல்லை; பரிந்துரைகள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திரும்ப திரும்ப
இதோ முதலீடு வருகிறது. இதோ தொழில்கள் துவங்கப் போகிறது. இதோ வேலைவாய்ப்பு வரப் போகிறது என்று கடந்த பத்து ஆண்டுகளாக சொன்ன ‘அம்புலி மாமா' கதையையே திரும்பத் திரும்ப அ.தி.மு.க. அரசு கூறி ஏமாற்றி வருகிறது.அதிலும் குறிப்பாக, இந்த நான்கு ஆண்டுகளாக முதலமைச்சர் திரு. பழனிசாமி தமிழக மக்களிடம் "புரிந்துணர்வு ஒப்பந்தம்" என்று மட்டும் கூறியே காலத்தைக் கடத்தி வருகிறார்! மந்திரத்தால் மாங்காய் விழுந்துவிடாது என்பதை உணர வேண்டும்.
ஆக்கப்பூர்வமாக
வேலை இழந்து, விரக்தியின் விளிம்பில் நிற்கும் இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகாமல், ஆக்கபூர்வமான வேலை வாய்ப்புத் திட்டங்களை, தேவையான அளவுக்கு, கிராமங்களிலும், நகரங்களிலும் ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். "சாலை ஓரத்திலே வேலை அற்றவர்கள்; வேலை அற்றவர்களின் மனதிலே விபரீதமான எண்ணங்கள்; இதுதான் காலத்தின் குறி!" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்றே சொன்னதை மறந்துவிடக் கூடாது.