நாடு இப்போது இருக்கும் சூழலில்... நீட் தேர்வை நடத்தக்கூடாது... மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: நாடு இப்போது இருக்கும் பதற்றமான சூழலில் கூட நீட் தேர்வுக்கான தேதியைக் குறிக்கிறார்கள் என்றால், இது என்ன மாதிரியான மனநிலை என்பது தமக்கு புரியவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், நீட் தேர்வை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்றும் மாநில அரசு இத்தேர்வைக் கட்டாயம் எதிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
டாஸ்மாக் கடைகள் திறப்பு... அப்படியெனில் ஊரடங்குக்கு உண்மையான பொருள் என்ன ? -மு.க.ஸ்டாலின்
கவலையில்லை
கொரோனா என்ற கொடூரத் தொற்றின் கோரத் தாண்டவத்தால், ஒட்டுமொத்தத் தேசமே அச்சத்திலும் பீதியிலும் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்திலும், ஜூலை 26-ம் தேதி "நீட்" தேர்வு நடைபெறும் என்று நடைபெறும் என்று அறிவித்திருப்பது, மாணவ - மாணவியரைப் பற்றியோ, அவர்தம் பெற்றோர்களைப் பற்றியோ, மத்திய அரசுக்குத் துளியும் அக்கறையோ கவலையோ இல்லை என்றே தெரிகிறது.
என்ன மாதிரியான மனநிலை
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கான தேதியைக் குறிக்கிறார்கள் என்றால், இது என்ன மாதிரியான மனநிலை என்பது புரியவில்லை.
கொரோனா காலம்
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான 68 ஆயிரம் கோடிக் கடனுக்குச் சலுகை அளிப்பதும், பல்லாயிரம் கோடி மதிப்பிலான நாடாளுமன்றக் கட்டடத்துக்கான பணிகளைத் தொய்வின்றி தொடர்வதும், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி மதிப்பைச் சிதைத்து அதனை மத்திய அமைச்சகத்தின் ஏவல் அமைப்பாக மாற்றுவதுமான, வெகுமக்களுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத காரியங்களில் இந்த கொரோனா காலத்திலும் குறியாக இருப்பது போலவே, நீட் தேர்வை நடத்தி சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைக் கலைப்பதிலும் மத்திய பா.ஜ.க. அரசு அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
ஒத்தி வைக்கவும்
இத்தேர்வு நியாயமாக நேர்மையாக நடைபெறவில்லை என்பதற்கு உதாரணமாக ஆள்மாறாட்ட வழக்குகள் பதிவாகி, பல மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் சிறையில் அடைக்கப்பட்ட காட்சியையும் பார்த்தோம். இப்படி முறையற்ற ஒரு தேர்வை, இந்தக் கொரோனா காலத்திலும் நடத்தாமல் மத்திய அரசு ஒத்தி வைக்க வேண்டும்.