ஆளுநர் உரையால் எதுவும் நடக்கப்போவதில்லை... மு.க.ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: அதிமுக ஆட்சியில் ஆளுநர் உரையினால் ஒரு நல்லதும் நடக்கப்போவதில்லை என்பதாலேயே அதனை புறக்கணித்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக ஆட்சியின் இந்த மூன்றாண்டு காலம் தமிழகத்தின் மிக இருண்ட காலம் என அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஆச்சரியம்.. ஆனால் உண்மை.. ஒரே மேடையில் திமுக - பாமக கை கோர்ப்பு.. சென்னை அருகே பரபரப்பு
நிம்மதி இல்லை
நீட் தேர்வில் இரட்டை வேடம்; தொழில் வளர்ச்சி இல்லை; சட்டம்-ஒழுங்கு சரியாகப் பேணப்படவில்லை; வேலையில்லாமல் இருக்கும் 90 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் இல்லை; அறிவிப்புகளை முழுமையாக நிறைவேற்றும் அக்கறை இல்லை; விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும், மீனவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், இந்த ஆட்சியில் நிறைவோ, நிம்மதியோ இல்லை.
துரோகம்
மதச் சார்பின்மைக்கு வேட்டு வைத்து - நாட்டில் பிளவுண்டாக்கும், மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஓட்டளித்து, அது நிறைவேறக் காரணமாகி; சிறுபான்மை இஸ்லாமியர்க்கும், இந்துக்களான ஈழத் தமிழர்களுக்கும் துரோகம் இழைத்து; தவறுகளுக்கெல்லாம் உச்ச கட்டத் தவறு இழைத்துவிட்டது எடப்பாடி அதிமுக.
தில்லு முல்லு
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், மாநிலத் தேர்தல் ஆணையம்- காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் - அதிமுக எனும் முக்கோணக் கூட்டணி அமைத்து; அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், அனைத்து விதமான தேர்தல் தில்லு முல்லுகளிலும் ஈடுபட்டது இந்த அரசு.
சம்பிரதாயம்
அதிமுக ஆட்சியில் ஏதோ சடங்குக்காகவும், சம்பிரதாயத்திற்காகவும் நடக்கும் இந்த ஆளுநர் உரையினால் நாட்டில் எந்தவிதத் தாக்கமும் எள்ளளவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. எனவே அந்த உரையைப் புறக்கணித்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.