உதவிகேட்டு இதுவரை 15 லட்சம் அழைப்புகள்... திமுகவினர் இருக்கும் திசைநோக்கி வணங்குகிறேன்- ஸ்டாலின்
சென்னை: கொரோனா காலத்தில் கூட வீடுகளில் முடங்காமல் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய திமுகவினர் இருக்கும் திசைநோக்கி தாம் வணங்குவதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவிடம் வரும் கோரிக்கைகளை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சேர்த்து, அரசை மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்துச் செயல்பட வைப்போம் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ள அவர் அதில் பேசியிருப்பதாவது;
334 சூப்பர் ஸ்பிரெட்டர்.. 'எல்' வகை கொரோனா.. குஜராத்தில் கேஸ்கள் அதிகரிக்க என்ன காரணம்.. பின்னணி!
ஒன்றிணைவோம் வா
கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்றின் காரணமாக, இன்றைக்கு நாடே முடங்கிக் கிடக்கிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு, எங்களால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகத்தான் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தைத் தொடங்கினேன். அன்றாட தினக்கூலிகள், அமைப்புசாராப் பணியாளர்கள், ஏழைகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு, மேலும், தேவைப்படும் மக்களுக்கு உணவும் மருந்துப் பொருளும் வாங்கிக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தோடு ஏப்ரல் 20-ம் தேதி இந்தத் திட்டத்தை தொடங்கினோம்.
சங்கிலித் தொடர்
இதற்காக 90730 90730 என்ற மக்கள் உதவி எண்ணை அறிவித்தோம். அறிவிப்பு செய்த மறுநாளே மளமளவென்று அழைப்புகள் வரத் தொடங்கின.
இதுவரையில் எங்களுக்கு 15 லட்சம் அழைப்புகள் மக்களிடம் இருந்து வந்திருக்கின்றன. இதற்காகவே தனியாக ஒரு அலுவலகத்தையே அமைக்க வேண்டியதாக இருந்தது. மக்களோடு தொலைபேசியில் பேசுவது, அவர்கள் கேட்கும் உதவிகளைக் குறித்து வைத்துக் கொள்வது, இதை அவர்கள் இருக்கும் பகுதியின் தி.மு.க. நிர்வாகிகளுக்குச் சொல்வது, உதவி கிடைத்துவிட்டதா என்று கேட்பது, என்று ‘ஆய்வு' செய்வதென்று மிகப்பெரிய சங்கிலித் தொடர் போல் இயங்கினோம்.
ஏராளமான நண்பர்கள்
இதற்காகவே ஏராளமான நண்பர்கள் என்னுடைய அலுவலகத்தில் இருந்து செயல்பட்டார்கள்! இதேமாதிரி இன்னொரு சேவையையும் செய்தோம். அதுதான் - உணவு அளித்தல்! வீடு இல்லாதவர்கள், சமையல் செய்து சாப்பிடக் கூட வழியில்லாதவர்களுக்கு உணவுகளைத் தயாரித்துக் கொடுப்பது. இன்றைக்கு வரையில் 16 லட்சம் பேருக்கு உணவுகள் வழங்கி இருக்கிறோம். இதற்காக உணவுக்கூடங்கள் ஏற்பாடு செய்து சமையல் தயார் செய்து, தொண்டு நிறுவனங்களிடம் கொடுத்தோம். அவர்கள் அனைவருக்கும் கொடுத்தார்கள்.
நேரடியாக பேசினேன்
தினமும் தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசினேன். இந்தப் பொருட்களைக் கொண்டு போய் கொடுத்த தன்னார்வலர்களிடம் பேசினேன். பயனடைந்த மக்களிடமும் பேசினேன். எல்லோரது முகத்திலும் மகிழ்ச்சியைப் பார்த்தேன்! நாங்கள் விரும்பியது கிடைத்துவிட்டது என்று அவர்கள் சொல்லும்போது எனக்கு மனநிறைவாக இருந்தது.
வணங்குகிறேன்
கொரோனா காலத்திலும் சளைக்காமல், இரவு பகல் பாராமல், வேகாத வெயிலில் அலைந்தார்கள் தி.மு.கழக நிர்வாகிகள். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. நீங்கள் அனைவரும் இருக்கும் திசை நோக்கி நான் வணங்குகிறேன்! ஏனென்றால், தங்களைப் பற்றிக் கவலைப்படாமல், மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறவர்கள்தான் தி.மு.க. தொண்டர்கள். 'எல்லாப் பதவியையும், பதவியாக நினைக்காமல் பொறுப்பாக நினைப்பவர்கள் தி.மு.க. நிர்வாகிகள்'.
5 பேர் கொண்ட குழு
எங்களிடம் வரும் கோரிக்கைகளை இணையத்தின் மூலமாக அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சேர்க்கப் போகிறோம். அதாவது, அரசாங்கத்தை மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்துச் செயல்பட வைக்கப்போகிறோம். நானே முதலமைச்சர் அலுவலகத்துக்கு அந்த மனுக்களை அனுப்பப் போகிறேன். அவர் அதனைக் கண்டு கொள்ளவில்லை என்றால், தி.மு.க.,வின் ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து தலைமைச் செயலாளருக்கு இந்தக் கோரிக்கை மனுக்களை அனுப்பி வைக்கப் போகிறோம்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் நலனே எங்கள் தலையாய கடமையாகக் கொண்டு இருக்கிறோம்.