தேமுதிகவுடன் பேசவில்லை.. பேசினால் சொல்லி அனுப்புகிறோம்.. மு.க.ஸ்டாலின்
Recommended Video
சென்னை: தேமுதிகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை எதையும் நடத்தவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து கட்சி நிர்வாகதிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆலோசனை நடத்தியது.
அதுபோல் கிண்டியில் உள்ள ஹோட்டலில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
முதலில் சொல்கிறோம்
பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தேமுதிக, திமுக கூட்டணியில் வரவிருக்கிறதா என கேட்டனர். அதற்கு அவரோ தேமுதிக வந்தால் உங்களுக்கு முதலில் சொல்லி அனுப்புகிறோம் என்றார்.
தோழமை கட்சி
தொடர்ந்து அவர் பேசுகையில், தேமுதிகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அதிமுக அமைத்தது மக்கள் நலக் கூட்டணி என இவர்கள்தானே சொல்லிக் கொள்கின்றனர். ஆனால் பண நல கூட்டணி என்றுதானே மக்கள் அழைக்கின்றனர். ஏற்கெனவே எங்களுக்கு உள்ள தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்போம்.
திமுக
21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என்று அறிவிப்பு வந்தால் அது குறித்து பேசுவோம். தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள இடங்களில் திமுக போட்டியிடும்.
விமர்சனம்
முதல்வர் எடப்பாடியையும் அரசையும் பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்ததை விட நான் கூறிய வார்த்தைகள் ஒன்றும் பெரிதல்ல என்றார். அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்தது குறித்து நேற்றைய தினம் மு.க.ஸ்டாலினிடம் கேட்டபோது சூடு இல்லை, சொரணை இல்லை, வெட்கம் இல்லை என்று கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.