கொரோனா தடுப்பு பணிகளில்... தமிழக அரசு தோல்வி... தவறு மேல் தவறு நடக்கிறது -ஸ்டாலின் பரபரப்பு புகார்
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் விவகாரத்தில் தமிழக அரசு தோல்வியை தழுவியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காணொலி மூலம் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மேலும், கொரோனா குறித்து அரசு வெளியிடும் செய்தி குறிப்பில் தகவல்கள் மறைக்கப்படுவதாக தெரிவித்தார்.
கொரோனாவை கட்டுப்படுத்த ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்புகளை தமிழக அரசு தவறவிட்டு விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
மருந்தே இல்லையே.. கொரோனா பாதித்தவர்களுக்கு அப்படி என்ன சிகிச்சை வழங்கப்படுகிறது? முழு விளக்கம்
நீண்ட நாட்களுக்கு பிறகு
கொரோனா பரவல் மற்றும் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசுவதற்காக காணொலி மூலம் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு என்பதால் அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல் ஊடகங்களுக்கு தாம் தெரிவிக்க நினைத்த கருத்துக்களையும், அரசுக்கு முன் வைக்க விரும்பும் கேள்விகளையும் ஸ்டாலின் பட்டியலிட்டார்.
அரசு திணறல்
தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் முழு தோல்வி அடைந்துள்ளதாகவும், தலைமைப் பண்பு இல்லாதவரின் ஆட்சி நடப்பதாகவும் தெரிவித்தார். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க முடியாமல் அரசு திணறி வருவதாக கூறிய அவர், கொரோனா பரவல் இல்லை என்றால் தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க என்ன காரணம் என அவர் வினவினார். திமுக தொடர்ந்து ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கியும் தமிழக அரசு அதனை நிராகரிப்பதாக வேதனை தெரிவித்தார்.
கமிட்டி மேல் கமிட்டி
கொரோனா தடுப்பு பணிகளுக்காக கமிட்டி மேல் கமிட்டி அமைக்கப்படும் நிலையில் அந்த கமிட்டிகளின் அறிக்கைகள் எங்கே என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகளோடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் பரவல் பற்றி கலந்து பேச அரசு தயங்குவது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். கொரோனா மரணத்தை முறைப்படி கணக்கெடுக்கும் ஒரு நடைமுறையை அரசு ஏன் உருவாக்கவில்லை என அவர் வினவினார். அரசின் அலட்சியத்தால் தான் கொரோனா வேகமாக பரவியதாக புகார் கூறினார்.
முற்றுப்புள்ளி
கொரோனா விவகாரத்தில் தமிழக அரசு தவறுக்கு மேல் தவறு செய்து வருவதாகவும், உண்மைக்கு மாறான தகவலை அரசு வெளியிடுவதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இனியும் அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என்றால் திமுக நீதிமன்றத்தை நாடும் என ஸ்டாலின் எச்சரித்தார். கொரோனா பேரிடரில் நிலவும் குழப்பங்களுக்கும், குளறுபடிகளுக்கும் அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.