நீட் தேர்வு விவகாரம்... தமிழக அரசு நாடகம் நடத்துகிறது... மு.க.ஸ்டாலின் பரபரப்பு புகார்
சென்னை: நீட் தேர்வு விவகாரத்தை பொறுத்தவரை தமிழக அரசு நாடகம் நடத்தி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்ட பிறகு கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு போதிய அழுத்தம் தரவில்லை என்றும் டெல்லிக்கு சென்று நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான வழிமுறைகளை அரசு மேற்கொள்ளவே இல்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், நீட் தேர்வு மன உளைச்சலால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவச்செல்வங்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சபாநாயகரிடம் தாம் கோரிக்கை வைத்ததாகவும் ஆனால் அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
இன்னும் 2 நாட்கள் மட்டுமே சட்டசபைக் கூட்டத் தொடர் நடைபெற உள்ளதால் அதில் பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்து திமுக பேசும் என்றும் உறுதியளித்துள்ளார் ஸ்டாலின். இதனிடையே சட்டசபைக்கு வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ''நீட் தேர்வை ரத்து செய்'' என்ற வாசகம் தாங்கிய முககவசத்தை அணிந்திருந்தனர்.
#NEET மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும் - கமல்ஹாசன்
இந்திமொழி தெரியாது போடா என்ற வாசகம் தாங்கிய டீ-ஷர்ட் இளைஞர்கள் மத்தியில் டிரெண்ட் ஆகிவரும் நிலையில், ''BAN NEET'' என்ற வாசகம் தாங்கிய முகக்கவசம் இப்போது டிரெண்ட் ஆகத் தொடங்கியுள்ளது. நீட் பிரச்சனை, கொரோனா தடுப்பு பணிகள், பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து திமுக நாளை அவையில் புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது.