அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு செய்தியால் அதிர்ச்சி- துணை முதல்வர் ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை: அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவால் மறைவுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
1996-ல் சென்னை மாநகர மேயராக மு.க.ஸ்டாலின் பதவி வகித்த போது வெற்றிவேல் அப்போது சென்னை மாநகராட்சியில் தமாக கவுன்சிலராகவும் தமாகா குழு தலைவராகவும் பணியாற்றினார். பின்னர் இருவரும் சட்டசபையில் எம்.எல்.ஏக்களாகவும் பணியாற்றினர்.
மூப்பனார், ஜெ., சசிகலா- தினகரனிடம் உச்சகட்ட விசுவாசத்தின் அடையாளமாக இருந்தவர் வெற்றிவேல்!
வெற்றிவேல் மறைவுக்கு ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல்: அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல்! அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்! இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
சீமான் இரங்கல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல்: அமமுக பொருளாளர் அருமைச் சகோதரர் வெற்றிவேல் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயரடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
வெற்றி... வெற்றி.. என வாய் நிறைய அழைத்து இனி யாரிடம் பேசப்போகிறோம்: டிடிவி தினகரன் கண்ணீர்
தவ்ஹீத் ஜமாஅத் இரங்கல்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள இரங்கல்: அமமுக பொருளாளரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. நல்ல பண்பாளரான வெற்றிவேல் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர்,கட்சியினர்,நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவரின் குடும்பத்திற்கு மன அமைதியை தந்தருள பிரார்த்திக்கிறேன்.
துணை முதல்வர் ஓபிஎஸ்
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட இரங்கல் செய்தி: பெரம்பூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.வெற்றிவேல் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அவர்சார்ந்த இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!