மு.க. ஸ்டாலினிடம் மாற்றம்.. சிறப்பு.. இன்னும் ஒரு படி மேலே போனால்.. மிக சிறப்பு!
அனைத்து மதத்தினரையும் ஸ்டாலின் அரவணைத்து செல்வது சிறப்பாக இருக்கும்.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் இப்படி ஒரு மாற்றத்தை தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கொஞ்ச நாளாகவே திமுக சார்பில் நிறைய வழிபாடுகள் நடத்தப்படுவதாகவும், திராவிட நாடு கொள்கையை கைவிட்டுவிட்டதாகவும் சர்ச்சைகள் எழ ஆரம்பித்தன.
கருணாநிதி மறைவிற்குப் பிறகு திமுக தனது கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டு வருவதாக சலசலப்பு ஏற்பட துவங்கி உள்ளது.
சர்ச்சைகள்
கரூரில் 27-ம்தேதி நடக்க கட்சி சார்பாக ஒரு விழா நடக்க போகிறது. இதற்காக பந்தல்கால் நடும் விழா 2 நாட்களுக்கு முன்பு நடந்து, அதற்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. இது பல சர்ச்சைகளை கிளப்பியது. இந்த நிலையில்தான், கொளத்தூர் தொகுதியில் கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.
மத போதகர்கள்
விழாவில் 11 பேராயர்களுக்கு சிறப்பு செய்து, கொளத்தூர் தொகுதியில் உள்ள போதகர்கள் 67 பேருக்கு பரிசுப் பொருட்களை ஸ்டாலின் வழங்கினார். மேலும், 625 கிறிஸ்துவ மக்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டு உரையாற்றினார். உண்மையிலேயே ஸ்டாலினின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.
மத உணர்வுகள்
கடவுள் மறுப்பு, திராவிட கொள்கை என்பது வேறு. மத உணர்வுகளை மதிப்பது என்பது வேறு. கருணாநிதி சமாதியில் முரசொலி பேப்பர் எதற்கு, அவர் என்ன எழுந்து வந்து படிக்கவா போகிறார்? இது மூடநம்பிக்கை என்றுகூட சர்ச்சை எழுந்தது. இது அவரவர் நம்பிக்கை, அவரவர் மனம், மதம் சம்பந்தப்பட்ட விஷயம் என்றுகூட தெரியாமல் விமர்சனங்களை அள்ளி வீசினார்கள்.
ஜெயலலிதா
ஆனால் எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல் ஸ்டாலின் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விழாக்களில் பங்கெடுத்து வருவது வரவேற்கத்தக்க ஒன்றுதான். மேலோட்டமாக பார்த்தால், ஒரு சாராரின் ஓட்டுக்களை வாங்குவதற்காகத்தான் இவ்வாறு செய்கிறார் என்றும் வார்த்தைகள் வீசப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி பார்த்தால், ஜெயலலிதா பங்கேற்காத கிறிஸ்துமஸ் விழா ஏதாவது உண்டா என்ன?
தடுக்க முடியவில்லை
ஆனால் இதேபோல அனைத்து மத விழாக்களிலும் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்பதே பொதுவான விருப்பமாக உள்ளது. திராவிடம், கொள்கை, என்று என்னதான் ஒதுங்கி ஒதுக்கி வைத்து விட்டு போனாலும், கெட்ட பெயர்கள் வந்து குவிந்ததை தவிர்க்கவும் முடியவில்லை, அதனை தடுக்கவும் முடியவில்லை.
துவேஷங்கள்
அதனால், அனைவரும் சமம் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தையும்தர வேண்டுமானால் ஸ்டாலின் புதிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என அனைவரையுமே அரவணைத்துச் செல்ல முன்வேண்டும். இதில் ஒரு நல்லதும் அடங்கியிருக்கிறது. இந்து விரோத கட்சி திமுக என்ற இந்து அமைப்புகளின் துவேஷத்தையும் துடைத்துப் போட முடியும்.
சிறுபான்மை மக்கள்
இதற்கு நேற்றைய விழாவில் அவர் பேசிய 2 விஷயங்களையே மேற்கோள் காட்டலாம். ஒன்று, "மோடி தலைமையிலான மத்திய அரசு மதவாதம் பிடித்து இருக்கக்கூடிய ஆட்சி. சிறுபான்மை மக்களுக்கு விரோதமாக ஆட்சி நடக்கிறது. இதை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்" என்றார்.
செல்ல பிள்ளை
மற்றொன்று, "கொளத்தூர் தொகுதியில் நல்ல பிள்ளையாக பணியாற்றினால் தான் மக்களிடத்தில் ஒரு செல்லப் பிள்ளையாக பழகக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்" என்று பேசினார். முதல் கூற்றில் தன் நிலைப்பாட்டினை அனைத்து கட்சியினரிடமும் ஸ்டாலின் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டால், இரண்டாவது கூற்று நிஜமாகும் என்பதில் சந்தேகமே இல்லை.