லைம்லைட்டில் மீண்டும் வந்த சரத்குமார்.. முதல்வர் ஸ்டாலினுக்கு வைத்த முக்கிய கோரிக்கை இதுதான்..!
சென்னை: சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமின் பாதுகாப்பையும், காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு, முதல்வர் ஸ்டாலினை சமக தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடிகர் சரத்குமார் சமீப காலமாக தீவிரமான அரசியல் செயல்பாடுகள் எதுவுமின்றி ஒதுங்கி உள்ளார்.. சட்டசபை தேர்தலில் கமலுடன் கூட்டணி வைத்தபிறகு ஆளையே காணவில்லை..
அந்த தேர்தல் முடிவும் சொல்லி கொள்ளும்படியாக அமையவில்லை. ஒவ்வொரு முறை சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும்போது மட்டுமே அவரது செயல்பாடுகள் வெளி உலகுக்கு தெரியவரும்..
கொடுங்கையூர்: நைட் 11 மணியிலிருந்து மறுநாள் வரை ஷிப்ட் போட்டு அடிச்சாங்க.. சட்டக் கல்லூரி மாணவர்

சரத்குமார்
அதுகூட தங்கள் கட்சிக்கு இத்தனை தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்துவிட்டு போவாரே தவிர, மற்ற நேரங்களில் சமக சத்தமே இல்லாமல் ஒதுங்கி இருக்கிறது.. இந்நிலையில் திடீரென லைம்லைட்டில் வந்துள்ளார் சரத்குமார்.. சென்னை வியாசர்பாடி மாணவனுக்காக பரிந்து பேசி ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:

மாணவர்
"சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற சட்டக்கல்லூரி மாணவர் முகக்கவசம் அணியவில்லை என்று கூறி, காவலர்கள் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்ததையடுத்து, முகக்கவசம் அணிந்திருந்த மாணவர் ரஹீம் அபராத தொகை செலுத்த மறுத்ததால், காவலர்கள் மாணவர் ரஹீமை கைது செய்து, காவல்நிலையத்தில் அவரை நிர்வாணப்படுத்தி, அவர் மீது சிறுநீர் கழித்து, அருவருத்தக்க, கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் அறிந்து பேரதிர்ச்சியும், பதட்டமும் அடைந்தேன்.

நடவடிக்கை
ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கை போன்று, காவல்நிலையத்தில் மனிதாபிமானமின்றி நடந்தேறும் கொடூர தாக்குதல்கள் இனியும் தொடராமல் தடுத்து நிறுத்தப்பட இந்த பிரச்சனையை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அடையாள அட்டையை காண்பித்தும் சட்டக்கல்லூரி மாணவர் மீது இரக்கமற்ற தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிற காவலர்கள் சட்டத்தினை கையிலெடுத்து, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் சூழ்நிலை மாறும்.

முதல்வர் ஸ்டாலின்
மக்கள் பாதுகாப்புக்காக நேரம் பார்க்காமல் உழைக்கும் காவலர்கள் மீது மக்கள் கொண்டிருக்கும் மரியாதை இதுபோன்ற சில விரும்பத்தகாத செயல்களால் ஒட்டுமொத்த காவல்துறையினர் மீது அவநம்பிக்கையும், அச்சமும் உருவாக்கிவிடக்கூடாது. இப்பிரச்சனையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கவனம் செலுத்தி சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமின் பாதுகாப்பையும், காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.