சிபிஎஸ்இ பாடங்கள்- பாஜக மீது மு.க.ஸ்டாலின் திடீர் அட்டாக்- நோட்டாவை தாண்டுவதை கூட மறந்துவிடலாமாம்!
சென்னை: சி.பி.எஸ்.இ. பாடங்களில் தமிழகம் தொடர்பானவை நீக்கப்பட்டதை முன்வைத்து பாரதிய ஜனதா கட்சியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்; இந்த திட்டத்தை நிறைவேற்றினால் தமிழக மக்கள் மனங்களில் பிரதமர் மோடி நீங்காத இடம் பிடிப்பார் என்று திடீரென திமுகவின் எம்பி டி.ஆர். பாலு, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினார். இதுநாள் வரை இல்லாமல் மத்திய பாஜக அரசிடம் திமுக மென்மை போக்கை வெளிப்படுத்துவது பெரும் விவாதப் பொருளானது.
சிபிஎஸ்இ. பாடப் புத்தகங்களில் தந்தை பெரியார் சிந்தனைகள் நீக்கம்: மத்திய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம்
மத்திய அரசுடன் இணக்கமா?
திமுக கடுமையாக மத்திய அரசை எதிர்த்து போராட்டங்கள் நடத்துகிறது. ஆனாலும் திமுகவின் டெல்லி லாபியிஸ்டுகள், மத்திய அரசுடன் இணக்கமாக போக வேண்டும் என விரும்புகின்றனர் என கூறப்பட்டு வந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில்தான் டி.ஆர். பாலுவின் கடிதம் அமைந்திருந்தது.
மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டங்களில் இருந்து பல்வேறு பகுதிகளை மத்திய அரசு நீக்கி உள்ளது. இதில் தந்தை பெரியார் சிந்தனை உள்ளிட்ட பல பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டனர்.
ஸ்டாலினின் இரவு ட்வீட்
ஆனால் திமுக தலைமை மத்திய அரசை கண்டித்து அறிக்கை எதுவும் வெளியிடாமல் இருந்தது. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் இரவில் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார். அதில் பாஜகவை மிக கடுமையாகவே விமர்சித்திருக்கிறார்.
நோட்டாவை கூட...
மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பதிவில், இராணுவ உடையில் திருக்குறளை சுட்டும் பிரதமர் ‘ராணுவத்தில் தமிழர் பங்கு' என்ற CBSE பாடத்தை நீக்குகிறார். தமிழர் நேசிக்கும் சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், ம.பொ.சி-ன் எல்லைப் போராட்டம் ஆகியவற்றை மீண்டும் இணைக்க மறுத்தால் இம்மண்ணில் NOTA வை தாண்டுவதைக் கூட பாஜக மறந்துவிடலாம் என குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.