வீட்டில் நடத்த வேண்டியதுதானே.. தலைமை செயலகம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா.. ஸ்டாலின் சாடல்
சென்னை: யாகம் நடத்தனீங்களோ, பூஜையை நடத்தனீங்களோ, அதை உங்கள் வீட்டில் நடத்த வேண்டியதுதானே, தலைமை செயலகம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? என திமுக தலைவர் ஸ்டாலின் காட்டமாக கேள்வியை எழுப்பியுள்ளார்.
தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறையில் நேற்று முன்தினம் அதிகாலை யாகம் நடத்தப்பட்டதாக தகவல்கள் பரவின. இது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது.
"ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு போனதுபோல், கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு சென்றுவிட்டால், அப்போது முதல்வர் பதவி காலியாகும், அதனை கைப்பற்றத்தான் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்துகிறாரா" என்ற ஒரு கேள்வியை ஸ்டாலின் கொளுத்தி போட, அந்த யாகம் வளர்த்த விவகாரத்துடன் சேர்த்து இன்னும் கொழுந்துவிட்டு எரிந்தது.
ஸ்டாலின் நம்புகிறாரா?
பிறகு, கரையான் அரித்ததால்தான் தன்னுடைய அறை சுத்தப்படுத்தப்பட்டு, அதற்கான பூஜை செய்யப்பட்டதாக ஓபிஎஸ் விளக்கம் அளித்ததுடன், யாகம் நடத்தினால், முதல்வராகிவிடலாம் என்று ஸ்டாலின் நம்புகிறாரா?" என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார். ஓபிஎஸ் விளக்கம் அளித்தாலும் இந்த விஷயத்தை ஸ்டாலின் இன்னும் விடுவதாக இல்லை. கரூர் ஈசநத்தம் ஊராட்சியில் ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் பேசியபோது சொன்னதாவது:
கோட்டையில் யாகம்
"பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏனென்றால் ஓபிஎஸ்ஸோடு சேர்த்து 11 எம்எல்ஏக்கள் நிலை என்ன ஆக போகின்றது என்ற நிலை இன்றைக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. அதனால்தான் 2 நாளைக்கு முன்னாடி கோட்டையில் ஓபிஎஸ் யாகம் ஒன்றை நடத்தி இருக்கிறார்.
கவலை கிடையாது
அதிலிருந்து எப்படியாவது தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் யாகத்தை நடத்தி உள்ளார். யாகம் ஒன்றும் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டோம் என்கிறார். நீ சாமியை தான் கும்பிட்டியா? இல்லை யாகம் நடத்தினாயா? என்றெல்லாம் எனக்கு கவலை கிடையாது.
அப்பன் வீட்டு சொத்தா?
எதுவானாலும் உன் வீட்டில் நடத்தி இருக்கலாமே? கோட்டை உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? மக்களின் வரிப் பணத்தில் உருவான கோட்டையில் ஏன் யாகம் நடத்தினீர்கள்? எல்லாவற்றிற்கும் தயாராகதான் இருக்கிறார்கள்'' என்றார்.