கொரோனாவால் 10,000 பேர் மாண்டுபோனதற்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? மு.க.ஸ்டாலின்
சென்னை: கொரோனா தொற்றால் தமிழகத்தில் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையை தமிழக அரசு மறைத்துவிட்டது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட திமுக முப்பெரும் விழாவில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் தந்தை பெரியார், அண்ணா ஆகியோரது கனவுகளை கருணாநிதிதான் நிறைவேற்றினார். கருணாநிதியின் ஆட்சியில் தொழில்வளர்ச்சியில் தமிழகம் 3-வது இடத்தில் இருந்தது.
10 பைசா பிரியாணிக்காக.. அதிகாலை 4 மணிக்கே நின்ற கூட்டம்.. காற்றில் பறந்த கொரோனா விதிகள்
தமிழக தொழில் வளர்ச்சி
தற்போது தொழில்வளர்ச்சியில் தமிழகம் 14-வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டிருக்கிறது. கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் ஓசூர், ராணிப்பேட்டை என பல இடங்களில் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் தொழிற்சாலைகள் அமைக்க சூழ்நிலையை உருவாக்கியவர் கருணாநிதி.
கொரோனா மரணங்கள்- பதில் என்ன?
ஆனால் தமிழக முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நாடு நாடாக சுற்றி எதை கொண்டுவந்தார்கள்? தமிழகத்தில் கொரோனா மரணங்களை அரசு மறைத்துவிட்டது. கொரோனாவால் மாண்டுபோன 10,000 பேர் உயிரிழப்புகளுக்கு எடப்பாடி அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?
கொரோனாவில் கொள்ளை
கொரோனாவால் மக்கள் மடிந்தால்தான் ஊழல் செய்ய முடியும், கொள்ளை அடிக்க முடியும் என நினைக்கிறது தமிழக அரசு. லாக்டவுனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ5,000 வழங்க வலியுறுத்தியும் அதிமுக அரசு வழங்கவில்லை. மாநிலங்களின் வரி வருவாயை மத்திய அரசே எடுத்துக் கொள்கிறது. ஆனால் தமிழக அரசு இதை தட்டிக் கேட்கவில்லை.
விவசாய சட்டங்களுக்கு ஆதரவா?
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை தமிழக அரசு ஆதரிப்பது மன்னிக்க முடியாத துரோகம். இதை தமிழக விவசாயிகள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.