அய்யர்களை விட சீர்திருத்த திருமணத்தை நடத்தி வைக்கும் எங்களுக்குத்தான் அதிக கிராக்கி... ஸ்டாலின்
சென்னை: அய்யர்களை விட சீர்திருத்த திருமணங்களை நடத்தி வைக்கும் எங்களுக்குத்தான் அதிகமான கிராக்கி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:
சீர்திருத்தத் திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெறுகிறது என்றால், அந்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை அன்றைக்கு நாம் பெற்றிருக்கவில்லை. ஆனால், 1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, ஆட்சிப் பொறுப்பை அறிஞர் அண்ணா தலைமையில் நாம் முதன்முதலாக ஏற்றோம். அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று - சட்டமன்றத்தில் நுழைந்து எத்தனையோ தீர்மானங்களை நமக்காக நிறைவேற்றித் தந்திருக்கிறார்கள்.
அமலாக்கத்துறை ஆட்டத்தால் ஆடிப் போன ப.சிதம்பரம்.. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு
ஆனால், அவர் நமக்காக முதலமைச்சர் என்ற முறையில் நிறைவேற்றித் தந்த முதல் தீர்மானம் எதுவென்றால், அது, சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்கிற தீர்மானம்தான்! எதற்காக நான் இங்கு இதை குறிப்பிட்டுக் காட்டுகிறேன் என்றால், சீர்திருத்தத் திருமணச் சட்டம் நம்முடைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட காரணத்தால்தான், நடைபெற்றிருக்கும் இந்த சீர்திருத்தத் திருமணம் சட்டப்படி - முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது.
திருமணங்களில் கலந்துகொள்வதற்கு என்னால் இப்போது நாட்களை கொடுக்க முடியவில்லை. காரணம், அவ்வளவு பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர், வருடக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நேரம் வேண்டாம்; நாள் வேண்டாம்; எந்த வருடம் என்றாலும் பரவாயில்லை இப்போதே உங்களில் தேதியை கொடுத்துவிடுங்கள் என்று கேட்கும் நிலையில் இருக்கிறார்கள்.
அப்படி, இந்த சீர்திருத்தத் திருமணத்திற்கு அப்படி ஒரு சிறப்பு பெருமை இன்றைக்கு கிடைத்திருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது, இதனைக் கூட ஊடகங்களில் விமர்சித்து இன்றைக்கே ஒரு விவாதம் வந்தாலும் வந்துவிடும்! அய்யர்களுக்கு இருக்கும் 'கிராக்கி'யைவிட இப்போது எங்களைப் போன்று இருக்கும், சீர்திருத்த திருமணங்களை நடத்தி வைப்பவர்களுக்குதான் அதிகமான கிராக்கி.
எனவே, அந்தளவிற்கு இன்றைக்கு நாட்டில் சீர்திருத்தத் திருமணங்கள் பரவலாக நடந்துகொண்டிருக்கிறது. இந்தத் திருமணங்கள், தந்தை பெரியாருக்கு, அறிஞர் அண்ணாவிற்கு, இன்றைக்கும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு நாம் ஏற்படுத்தித்தரும் மிகப்பெரிய பெருமை என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.