திராவிட வரலாறுகளை கற்றுத்தர ''திராவிடப்பள்ளி''... காணொலி மூலம் தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின்..!
சென்னை: திராவிட இயக்கத்தின் வரலாறை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் முயற்சியாக திராவிடப்பள்ளி நிறுவப்பட்டுள்ளது.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் முயற்சியில் இந்த திராவிடப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் திராவிடப்பள்ளியை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்.
அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாள்... முதல்வர் எடப்பாடி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!
திராவிட வரலாறு
திராவிட இயக்கத்தின் வரலாறுகளை இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் திராவிடப் பள்ளியை தொடங்கியிருக்கிறார் சுப.வீரபாண்டியன். திராவிட வரலாறுகள் குறித்து திமுக இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட பயிற்சிப் பாசறையில் இதுவரை பயிற்றுவித்து வந்த அவர் புதிய முயற்சியாக இந்தப் பள்ளியை தொடங்கியிருக்கிறார்.
142-வது பிறந்தநாள்
பெரியாரின் 142-வது பிறந்தநாளையொட்டி திராவிடப்பள்ளிக்கான தொடக்கவிழாவை எளிய முறையில் நடத்தியுள்ளார் சுப.வீரபாண்டியன். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் திராவிடப்பள்ளியை தொடங்கி வைத்த ஸ்டாலின், சுப.வீரபாண்டியன் மேற்கொண்டுள்ள புதுமை முயற்சிக்கு வாழ்த்தும், ஆதரவும் தெரிவித்தார்.
இணையம் வழி
திராவிட இயக்க வரலாறுகளை அறிந்துகொள்ள விரும்புவர்களுக்கு இணையம் வழியாகவும், அஞ்சல் வழியாகவும், திராவிட இயக்கத்தின் வரலாறு கற்றுத்தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "திராவிடப் பள்ளி" மூலம், திராவிட இயக்கத்தின் வரலாறு, கோட்பாடுகள், சாதனைகள் ஆகியவை விவரமாக எடுத்துரைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
திராவிட இயக்கங்கள்
தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, திராவிடர் கழகம், உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள் திராவிடம் என்ற பெயரை கட்சியின் பெயரிலேயே தாங்கியிருக்கின்றன. இந்நிலையில் சுப.வீரபாண்டியன் முன்னெடுத்துள்ள இந்த சீரிய முயற்சியை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி கட்சியின் அடுத்த தலைமுறையினருக்கு திராவிட இயக்க சாதனைகளை கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தால் அது அரசியலுக்கு வரும் புதிய தலைமுறைக்கு பயனுள்ளதாக இருக்கக்கூடும்.
ஸ்டாலின் பெருமிதம்
இதனிடையே திராவிடப்பள்ளியை தொடங்கி வைத்த பின்னர் ஸ்டாலின் பேசியதாவது; ''நம்முடைய பேராசிரியர் சுப.வீ. அவர்கள், நான் இளைஞர் அணியின் செயலாளராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றிய நேரத்தில், இளைஞரணித் தோழர்களுக்குத் திராவிட இயக்கத்தின் வரலாற்றை - சமூகநீதியின் கோட்பாடுகளைப் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் மூலமாகத் தமிழகம் முழுவதும் வலம் வந்து, அதைச் சிறப்புடன் நடத்தித் தந்தவர்.''
சுப.வீ.க்கு நன்றி
''அப்படிப்பட்ட அண்ணன் சுப.வீ. அவர்கள் இன்றைக்கு நாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு, திராவிட இயக்கத்தின் வரலாற்றை அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்தத் திராவிடப் பள்ளியை உருவாக்கி இருக்கிறார். அதை இன்று நான் தொடங்கி வைக்கிறேன். இந்த அரிய வாய்ப்பைத் தந்த அண்ணன் சுப.வீ. அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.''
நல்வாழ்த்துகள்
''வளர்ந்து வருகிற இந்தத் தொழில்நுட்பக் காலத்தில் ஒரு அருமையான நிலையில் இந்தத் திராவிடப் பள்ளியை, மக்களிடத்தில், குறிப்பாக, இளைஞர்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்தப் பணியை அவர் தொடங்கி இருக்கிறார். திராவிடத் தத்துவத்தின் கொள்கைகள் நிலைப்பெற்றிட - வெற்றி பெற்றிடத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.''