நெருக்கடிக் காலத்தில் திமுக எப்படிச் செயல்படும் என்பதை நிரூபித்துள்ளோம்... ஸ்டாலின் நெகிழ்ச்சி
சென்னை: பேராபத்துக் காலத்தில் தி.மு.க. எப்படிச் செயல்படும் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டி இருக்கிறோம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலக் களப்பணிகள் தொய்வின்றித் தொடரும் என்றும் திமுக நிர்வாகிகளை தலைவணங்குகிறேன் எனவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தயாராக இருங்கள்.. ஒரு பக்கம் கொரோனா.. இன்னொரு பக்கம் புயல்.. ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்
ஒரே இயக்கம்
ஊரடங்கை அறிவித்த அரசாங்கம், அப்பாவி மக்களின் வாழ்க்கையைப் பற்றியோ, வாழ்வாதாரத்தைப் பற்றியோ எந்தக் கவலையும் கொள்ளவில்லை. உழலும் தமிழ் மக்களைப் பற்றி உளப்பூர்வமாகக் கவலைப்பட்ட ஒரே இயக்கம் தி.மு.கழகம். மக்கள் அவசியம் தேவையென எதிர்பார்க்கும் அனைத்தையும், குமரி முதல் சென்னை வரை அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டுள்ளன.
பாகுபாடில்லை
சாதி - மதம் பார்க்காமல், வேண்டியவர் - வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாமல், அவர் அந்தக் கட்சி - இவர் இந்தக் கட்சி என்று பேதப் படுத்தாமல், இந்தச் சீரிய தொண்டு செய்யப்பட்டுள்ளது. இதில் சிலர் எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கும், தி.மு.க. நிர்வாகிகள் பாரபட்சம் பார்க்காமல் கேட்ட பொருளைக் கொடுத்துள்ளார்கள்.
ஆச்சரியம்
இன்னும் சொன்னால், 'இந்தத் திட்டம் முறையாகச் செயல்படுகிறதா' என்று நோட்டம் விடுவதற்காக ‘போன்' செய்தவர்கள் வீட்டுக்கும் பொருட்கள் முறையாக, ஒழுங்காகப் போய்ச் சேர்ந்துள்ளது. அதைக் கண்டு அவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். இதுதான் தி.மு.க.,வுக்குப் பெருமை சேர்ப்பது; இந்த இயக்கத்தின் தலைமைத் தொண்டனான எனக்கு மன மகிழ்ச்சியையும் பெருமையையும் தருவது!
ஐயப்பாடு
எங்களுக்கு வந்த அழைப்புகளில் பெரும்பாலானவை அரசாங்கம், மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை ஆகியவற்றால் மட்டுமே செய்ய முடிந்தவை. மக்கள் வைக்கின்ற கோரிக்கைகளைப் பார்க்கும்போது, இந்த நாட்டில் ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா? முதலமைச்சர் என்ற ஒருவர் இருக்கிறாரா? அமைச்சர்கள் செயல்படுகிறார்களா? - என்ற ஐயப்பாடே எழுகிறது!
டாஸ்மாக் திறப்பு
மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் திட்டமிட்ட முயற்சி எதுவும் எடுக்காத தமிழக அரசு, டாஸ்மாக் கடைத் திறப்புக்கு மட்டும் திருவிழா ஏற்பாடுகளைப் போல எண்ணி, துரிதமாகச் செயல்படுவதைப் போன்ற பொறுப்பற்ற தன்மை வேறு இருக்க முடியாது! ஒரு அரசாங்கமும், பல ஆயிரம் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து செய்ய வேண்டிய அளவிலான பெரிய செயலை, தி.மு.கழகம் என்ற அரசியல் அமைப்பு, செய்து காட்டியுள்ளது!
மகிழ்கிறேன்
இது சாதாரணமான நேரம் அல்ல; கொரோனா நோய்த்தொற்று காலம். இச்சேவையில் ஈடுபடும் நிர்வாகிகளும் இதற்கு ஆளாகக் கூடும். ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படாமல், தி.மு.க. நிர்வாகிகள் மக்கள் பணியாற்றினார்கள். இவர்கள் அனைவருடைய அரிய தொண்டுள்ளத்துக்கும் நான் தலைவணங்குகிறேன்! தி.மு.க.,வினர் அனைவரும் செம்மாந்து நிற்பதைப் பார்த்து, இந்த இயக்கத்தை வழிநடத்திச் செல்லும் தலைமைத் தொண்டன் என்கிற வகையில் மகிழ்கிறேன்.