கருணாநிதி பெயரில் சிற்றுண்டி- புரட்சி முதல்வர் நாராயணசாமி என ஸ்டாலின் புகழாரம்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதுவையில் மாணவர்களுக்காக காலை டிபன் வழங்கும் திட்டத்தை அறிவித்த அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கு புரட்சி முதல்வர் என புகழாரம் சூட்டியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
புதுச்சேரி சட்டசபையில் இன்று பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதல் இல்லாமலேயே பட்ஜெட்டை நாராயணசாமி தாக்கல் செய்தது சர்ச்சையாகி உள்ளது.
இதனிடையே பட்ஜெட்டை தாக்கல் செய்த நாராயணசாமி ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், புதுவையில் மாணவர்கள் அனைவருக்கும் கலைஞர் கருணாநிதி பெயரில் காலை டிபன் - சிற்றுண்டி வழங்கப்படும் என்பதும் ஒரு அறிவிப்பு.
இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து தமது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:
கலைத் தொண்டு மூலமாக 'கலைஞர் கழகம்' வளர்த்த புதுவையில் 'புரட்சி முதல்வர்' திரு. @VNarayanasami அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரால் பள்ளி மாணவர்க்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது பெருமகிழ்ச்சிக்குரியது. திமுக-வினர் மனதில் இடம்பெற்றுவிட்ட அவரது புகழ் வாழ்க!
புதுவையில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் பட்ஜெட் தாக்கல்- கலைஞர் பெயரில் சிற்றுண்டி, இலவச மின்சாரம்!
இவ்வாறு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.