இனி நேரடி டீலிங்தான்.. எல்லாவற்றிலும் நேரடியாக இறங்கி கலக்கப் போறாராம் ஸ்டாலின்!
சென்னை: திமுகவை பொறுத்தவரை எங்கும் ஸ்டாலின் எதிலும் ஸ்டாலின் என்ற நிலை வந்து கொண்டிருக்கிறது. இதனால் பல சீனியர்கள் ஓரம்கட்டப்பட்டு வருகின்றனர்.
திமுகவை பொறுத்தவரை கருணாநிதி இருந்தவரையில் மேல்மட்டத்தில் இருந்து தொடங்கி அனைத்து மட்டத்தில் உள்ளவர்களையும் அரவணைத்து செல்வார். அதுவே அவரது மிகப்பெரிய பிளஸ் ஆக இருந்தது. ஒரு மாவட்டத்திற்கு பேச சென்றார் என்றால் அந்த மாவட்டத்தில் இரு கோஷ்டிகள் இருந்தாலும் அந்த இரு கோஷ்டிகளை சேர்ந்தவர்களின் பெயர்களையும் மேடையில் உச்சரிப்பார்.
இதில் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை தலைவரிடம் தங்களுக்கான அங்கீகாரம் இன்னமும் இருக்குதுய்யா என்று பெருமிதம் கொள்வார்கள். ஆனால் ஸ்டாலினிடம் அது மிஸ் ஆவதாகவே உடன்பிறப்புகள் கூறி வருகின்றனர். அது போல தமிழக அரசியலில் தனது கட்சியை தனது கண் அசைவில் வைத்திருந்த கருணாநிதி டெல்லி அரசியலை கவனிக்க தனது மருமகன் முரசொலி மாறனை நியமித்திருந்தார்.
வாடகை வீட்டை காலி செய்த நல்லக்கண்ணு... அரசுக்கு பழநெடுமாறன் கோரிக்கை
கருணாநிதியின் மனசாட்சி
டெல்லியில் திமுக தொடர்பாகவும், திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது தமிழக அரசு தொடர்பாகவும் நடந்த அத்தனை அரசியல் மூவ் களும் முரசொலி மாறனின் ஆலோசனையின்படிதான் நடந்து வந்தது. முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் தயாநிதியை டெல்லி திமுக அரசியலுக்கு ராஜாவாக்க கருணாநிதி முயன்றார். ஆனால் அவரது சொந்த குடும்பமே அதற்கு சூனியம் வைத்துக் கொண்டது.
கனிமொழியின் பங்கு
இப்போது ஸ்டாலின் திமுகவின் தலைமைப் பொறுப்புக்கு வந்த பின்னர் டெல்லி அரசியலை திமுக மாநிலங்களவை உறுப்பினரும், கருணாநிதியின் மகளுமான கவனித்து வந்தார். இப்போது காங்கிரசோடு கூட்டணி பேசி முடித்ததில் கனிமொழியின் பங்கு கவனிக்கத்தக்க வகையில் இருந்தது. இந்த நிலையில் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு சோனியாவையும் ராகுலையும் அழைக்க சென்றதில் இருந்தே ராகுலுக்கும் ஸ்டாலினுக்கும் வேவ் லென்த் செட்டாகி விட்டது. அதன் பிறகு சிலைத் திறப்பு விழாவுக்கு இங்கு வந்த ராகுலை வருங்காலப் பிரதமர் என்று ஸ்டாலின் அறிவிக்க குளிர்ந்து போய்விட்டார் ராகுல்.
அதிகரிக்கும் முக்கியத்துவம்
அதன் பிறகு நடைபெற்ற 5 மாநில தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றி விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலினுக்கு காங்கிரஸ் சார்பில் அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி நடத்திய பேரணியிலும், மாநாட்டிலும் ஸ்டாலின் வெகு மரியாதையாக நடத்தப்பட்டார். இது இந்திய அரசியல் தலைவர்களின் கவன ஈர்ப்பை பெற்றது. தங்கள் கூட்டணிக்கு ஸ்டாலினின் பிரச்சாரமே போதுமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப,சிதம்பரம் கூறுமளவுக்கு ஸ்டாலினின் செல்வாக்கு டெல்லியில் உயர்ந்தது.
முக்கிய ஆலோசனை
இதற்கு அடுத்த நிலையாக தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அதாவது வரும் 21 ம் தேதி எதிர்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஒன்று கூடி அடுத்த ஆட்சியமைப்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட உள்ளார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஸ்டாலினே செல்ல உள்ளார். ராகுல் உள்ளிட்ட தேசியத் தலைவர்களோடு தங்கியிருந்து அவர் ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது.
டெல்லியில் முகாம்
தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்திலும் அவர் அங்கிருந்தே அரசியல் நகர்வுகளை கவனிப்பார் என்று கூறுகிறார்கள் திமுக சீனியர்கள். தேவைப்பட்டால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் அன்று தமிழகம் வந்து நன்றி கூறிவிட்டு அடுத்த அரசு அமைக்கும் வேலைகளையும் குறிப்பாக தமிழகத்தில் திமுக அரசு அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் கவனம் செலுத்த உள்ளாராம் ஸ்டாலின்.
கனிமொழி நிலை
ஆகவே இப்போது திமுகவில் மாநில அரசியல் என்றாலும் தேசிய அரசியல் என்றாலும் ஸ்டாலின்தான் என்ற நிலை வந்து விட்டது என்று கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். அது சரி அப்போ கனிமொழி நிலை? காலம்தான் பதில் சொல்லணும்.