மோடியை நேரில் சந்திக்கும் ஸ்டாலின் : டெல்லி செல்லும் முதல்வருக்கு கிடைக்கும் கவுரவம் என்ன தெரியுமா
சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
சென்னை: தமிழ்நாடு முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது பிரதமர் அலுவலக அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோரும் உடன் இருப்பார்கள்.
Recommended Video
முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைப்பதற்காக திமுக மூத்த தலைவரான டி.ஆர்.பாலு எம்.பி. ஏற்கனவே டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில் மூத்த அமைச்சரான துரைமுருகன் இன்று டெல்லி செல்ல உள்ளார். இருவரும் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க உள்ளனர்.
இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை
நாளை மாலை சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பின்னர் நாளை மறுநாள்17ஆம் தேதி முதல் முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கும் அவர் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஸ்டாலினுக்கு கவுரவம்
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைத்து வருவதற்கு தனது சிறப்பு பாதுகாப்பு படையில் உள்ள புல்லட் புரூப் காரை மோடி அனுப்பி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் டெல்லி சென்று இருந்தபோது இதுபோன்ற புல்லட் புரூப் காரில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் பிறகு தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலினுக்கு இந்த சிறப்பு கவுரவம் அளிக்கப்படுகிறது.
மோடி - ஸ்டாலின் சந்திப்பு
நாளை மறுநாள் காலை டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது 35 முக்கிய விஷயங்கள் பற்றி பிரதமருடன் மு.க.ஸ்டாலின் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள்
மோடி- மு.க.ஸ்டாலின் இடையே நிர்வாக ரீதியாக நடைபெறும் இந்த சந்திப்பு சுமார் 1 மணிநேரம் நீடிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நலன்கள் தொடர்பான திட்டங்கள் பற்றி பிரதமருடன் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது பிரதமர் அலுவலக அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோரும் உடன் இருப்பார்கள்.
10 நிமிடங்கள் பேச வாய்ப்பு
இதன் பிறகு பிரதமர் மோடியும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனியாக சந்தித்து பேசுகிறார்கள். இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சோனியா காந்தி உடன் ஆலோசனை
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக டெல்லி செல்லும் மு.க ஸ்டாலின் பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பிறகு மறுநாள் 18ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேச உள்ளார். கூட்டணி கட்சித்தலைவர்களையும் நேரில் சந்தித்து பேசுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.