பொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை பொங்கலுக்குப் பின் தொடங்குவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் மெகா பிரசாரம் இன்று முதல் 75 நாட்களுக்கு நடைபெறுகிறது. மொத்தம் 1,500 பொதுக்கூட்டங்களில் 15 திமுகவின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பிரசாரம் செய்கின்றனர்.
திமுக பிரசாரம்- 1500 பொது கூட்டங்கள்- 15 பிரச்சாரகர்கள்- 75 நாட்கள்- இன்று தொடங்கி வைக்கும் உதயநிதி
ஸ்டாலின் பிரசாரம் எப்போது?
இந்த நிலையில் மு.க. ஸ்டாலினின் தேர்தல் பிரசாரம் எப்போது என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக முதன்மை செயலாளர் கே.என். நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கோவிட் 144 தடை
இதற்கு பதிலளித்த கே.என்.நேரு, இப்போது கோவிட் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இப்போது வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மு.க.ஸ்டாலின் தினந்தோறும் மக்களை தொடர்பு கொண்டுதான் இருக்கிறார். அவர் மாவட்டந்தோறும் நேரடியாக சென்றால் மிக அதிக அளவில் கூட்டம் கூடும்.
ஜனவரிக்கு பின் பிரசாரம்
கோவிட் முடிவுக்கு வந்த பின்னர் ஜனவரிக்கு மேலாக ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார் என்றார். இது தொடர்பாக அண்ணா அறிவாலய வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, ஸ்டாலினின் பிரசார தேதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.
பொங்கலுக்கு பின் ஸ்டாலின் பிரசாரம்
பொங்கல் பண்டிக்கைக்குப் பின்னர் ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்க வாய்ப்பிருக்கிறது. அதுவரை திமுகவின் 15 முக்கிய தலைவர்கள் பிரசாரத்தை தொடர்ந்து நடத்துவார்கள் என தெரிவித்தனர்.