கல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து
சென்னை: காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அனுராதாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ".
"புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டி கிராமம் பவுன்ராஜ் ராணி தம்பதியரின் மகள் ப.அனுராதா, 2019ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு தமிழகத்தில் முதல் பெண்மனியாக தங்கம் வென்றுள்ளார்.
87கிலோ உடல் எடைப்பிரிவில் கலந்துகொண்டு ஸ்னாச் முறையில் 100 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 121 கிலோ என்ற நிலையில் மொத்தம் 221 எடை தூக்கி தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளார். அவருக்கு, என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்" என கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன் ஷிப் போட்டியின் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை அனுராதாவை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்.
நெம்மேலிப்பட்டி என்ற சிறிய கிராமத்தில், மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்து இச்சாதனையைப் புரிந்திருக்கிற அனுராதா இன்னும் பல பெருமைகளை நம் நாட்டிற்குத் தேடித்தரவேண்டும். அவரது கனவுபடி ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிட வாழ்த்துகிறேன்.
அனுராதாவின் இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கின்ற, அவருக்காக கல்வியைத் துறந்த சகோதரர், கூலி வேலை செய்யும் தாய் ஆகியோரின் தியாகத்தைப் போற்றுகிறேன்" என கூறியுள்ளார்.