கனவு ஆசானே.. உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் காட்டுவோம்.. ஸ்டாலின் உருக்கமான பதிவு
சென்னை: கனவு ஆசானே, உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் காட்டுவோம் என பேராசிரியர் க அன்பழகனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றது தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
திமுக பொதுச் செயலாளர் வயோதிக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 1 மணிக்கு காலமானார்.
அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் ஊர்வலமாக வேலங்காடு இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
கண்ணீர்
அங்கு திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், டிஆர் பாலு, வைரமுத்து, திருச்சி சிவா உள்ளிட்டோர் தகன மேடையில் வைக்கப்பட்ட அன்பழகனின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். அப்போது ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுதனர். துரைமுருகன் குலுங்கி குலுங்கி அழுதபடியே தங்கள் ஆசானை அனுப்பிவிட்டு வெளியே வந்த காட்சி பார்ப்போரையும் கலங்க வைத்தது.
— Manoharan Karthik (@Kar2000k44) March 7, 2020 |
ட்விட்டரில் ஸ்டாலின்
இந்த நிலையில் பேராசிரியரின் இறுதி ஊர்வல புகைப்படங்களை வெளியிட்டு ஸ்டாலின் தனது ட்விட்டரில் உருக்கமான பதிவை போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் எனக்குத் தாயுமாய் தந்தையுமாய் தலைவருமாய் உயிருமாய் இருந்த பேராசிரியப் பெருந்தகையின் இறுதிப் பயணத்தில் பங்கெடுத்து வீரவணக்கம் செலுத்தி இருக்கிறேன்!
கனவு
மறக்காது உம் குரல் - கொள்கை - நோக்கு! கனவு ஆசானே! உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் காட்டுவோம்! வாழ்க #பேராசிரியர் புகழ்! என தெரிவித்துள்ளார். பேராசிரியரை பெரியப்பா என்றே அழைக்கு ஸ்டாலினுக்கு அவரது இழப்பை தாள முடியவில்லை. மேலும் பேராசிரியரின் இறுதி ஊர்வலத்திலும் அவரது வீட்டிலிருந்து மயானம் வரை நடந்தே சென்றார்.
ஸ்டாலின் கடிதம்
அவரது உயிர் பிரிந்தவுடன் அவர் தான் கைப்பட எழுதிய கடிதம் உருக்கத்தை தந்துள்ளது. அவர் கூறுகையில் அப்பா மறைந்தபோது பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன். இன்று பெரியப்பாவும் மறையும் போது என்ன சொல்லி என்னை நானே தேறுதல் சொல்வேன்?! பேராசிரியர் இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். இனி யாரிடம் ஆலோசனை கேட்பேன்? இனி யாரிடம் பாராட்டு பெறுவேன்? என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன்?! என உருக்கமாக கூறியிருந்தார்.