என்னுடைய 2-வது அண்ணன்... நீண்டகாலத்துக்குப் பின் அழகிரி பெயரை உச்சரித்த மு.க.ஸ்டாலின்
Recommended Video
சென்னை: என்னுடைய 2-வது அண்ணன் என மிக நீண்டகாலத்துக்குப் பின்னர் மு.க. அழகிரியின் பெயரை உச்சரித்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
திமுகவில் இருந்து கருணாநிதியால் நீக்கப்பட்ட மு.க. அழகிரி மீண்டும் கட்சியில் சேர முயற்சித்தார். ஆனால் அது நடைபெறவில்லை. கருணாநிதி மறைவுக்குப் பின்னரும் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.
ஆனால் அழகிரியை மீண்டும் சேர்ப்பது இல்லை என்கிற முடிவில் இருக்கிறது திமுக. பொதுவாக அழகிரி பற்றிய கேள்விகளை ஸ்டாலின் தவிர்த்து விடுவார்.
இன்று சென்னையில் நடைபெற்ற மணவிழாவில் மு.க. அழகிரியின் பெயரைக் குறிப்பிட்டு ஸ்டாலின் பேசியதாவது:
ஆசிகா தமிழ் பெயரா?
மணமகனின் பெயர் முத்துவேல் என்கின்ற தமிழ்ப் பெயர் தான். ஆனால், மணமளின் பெயர் ‘ஆசிகா இது' தமிழ் பெயரா என்பது கேள்விக்குறிதான்!? நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஆனால், அதே நேரத்தில் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, இன்றைக்கு தமிழ்மொழிக்கும் நம்முடைய இனத்திற்கும் சோதனை வரக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்ப் பெயர் சூட்டுவோம்
எனவே, இப்படிப்பட்ட இக்கட்டான காலகட்டத்திலாவது நம்முடைய குடும்ப வாரிசுகளுக்கு, நமக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும். இவ்வளவு சொல்கிறாயே நீ, ஸ்டாலின் என்ற பெயர் என்ன தமிழ்ப் பெயரா? ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் இல்லையே என்று சிலர் கேட்கலாம்.
ஸ்டாலின் பெயருக்கு காரணம்
என் பெயர்க்காரணம் குறித்துதான் பாரதி அவர்கள் விளக்கிச் சொன்னார். சோவியத் ரஷ்ய நாட்டின் அதிபராக விளங்கிய - கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான ஸ்டாலின் அவர்கள் மறைந்த நேரத்தில் நான் பிறந்த காரணத்தால், கருணாநிதி அந்தப் பெயரை எனக்கு வைத்தார்கள். காரணம், கருணாநிதிக்கு கம்யூனிசக் கொள்கையின்மீது அளவுகடந்த பற்று உண்டு - பாசம் உண்டு. எனவே, அந்த உணர்வோடு ஸ்டாலின் என்ற பெயரை எனக்கு சூட்டினார்.
தாத்தா நினைவாக முத்துவேல்
அதுமட்டுமல்ல, கருணாநிதி குடும்பப் பெயர்களைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். முரசொலி மாறன், செல்வம், அமிர்தம் இதெல்லாம் குடும்ப உறவினர் பெயர்கள். அவருடைய பிள்ளைகள், என்னுடைய மூத்த அண்ணனுக்கு, என்னுடைய தாத்தாவின் நினைவாக முத்துவேல் என்ற அவருடைய பெயரை சூட்டினார்கள்.
என்னுடைய அண்ணன் அழகிரி
அதேபோல் மேடையில் இவ்வளவு வீராவேசாமாக பேசுகிறேன் என்றால், அதற்கு பட்டுக்கோட்டை அழகிரிசாமி தான் காரணம் என்று கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். எனவே, அவரின் நினைவாக அழகிரி என்ற பெயரை என்னுடைய இரண்டாவது அண்ணனுக்கு வைத்தார்கள். அதேபோல், என்னுடைய தம்பிக்கு தமிழரசு, தங்கைகளுக்கு தமிழ்செல்வி, கனிமொழி என்று, வீட்டில் இருக்கும் அத்தனைப் பேரப்பிள்ளைகளுக்கும் தமிழ் பெயர்கள்தான். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.