நீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டசபை சிறப்பு கூட்டம்: ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: நீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட் வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
நீட் மசோதாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திரும்பி வந்த மசோதாக்களை திரும்ப பெற்றுக்கொண்டு, மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒப்புதல் கடிதம் அனுப்பி வைத்துள்ளது. இது, மறுக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டதாக பொருள்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் தொடர்பான அரசியல் சட்டப்பிரிவுகளை படித்து பார்த்தால், அதில், மீண்டும் சட்டமன்றத்தில் நீட் மசோதாவை நிறைவேற்றி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் அதிகாரம் இருக்கிறது என்பது தெளிவாக தெரியவரும். நீட் மசோதாக்கள் குறித்து கடந்தாண்டு ஜூன் மாதம் சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைபெற்ற வாதங்களை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சமர்பித்துள்ளது.
ஆனால் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைபெற்ற விவாதங்களின் நடவடிக்கை குறிப்புகளை ஏன் அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை?
ஏற்கனவே வாக்குறுதியளித்தபடி சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் இரு மசோதாக்களையும் மீண்டும் அவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.