தளர்வுகளைவிட இ-பாஸ் முறையையே முற்றிலும் கைவிட கவேண்டும்: மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் இ பாஸ் முறையையே முற்றிலும் நீக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா லாக்டவுன் அமலில் உள்ள சூழ்நிலையில் இ பாஸ் குறித்து ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. இ பாஸ் என்பதே மிகப் பெரிய மோசடியாக உருவெத்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இ பாஸ் முறையில் வரும் 17-ந் தேதி முதல் தளர்வுகள் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
இ-பாஸ் முறையில் தளர்வுகள் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே நான் வலியுறுத்தி வந்தேன்.
எளிய மக்களுக்கு அதற்கு விண்ணப்பிப்பதற்கே அதிக சிரமம் உள்ளது. எனவே இப்போதும் அம்முறையை முழுமையாக அகற்றுங்கள் என்றே வலியுறுத்துகிறேன்.
அதேநேரத்தில் இத்தளர்வை மிக மிக அவசியமான பயணங்களுக்கு மட்டும் பயன்படுத்தி கவனமாக இருக்க வேண்டுமென பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்!
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.