அருந்ததியர்- 3% உள் இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஓபிஎஸ், ஸ்டாலின், வைகோ வரவேற்பு
சென்னை: தமிழக அரசின் அருந்ததியருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ ஆகியோர் வரவேற்றுள்ளார்.
2009-ம் ஆண்டு தமிழக முதல்வராக கருணாநிதி இருந்த போது பட்டியல் இனத்தவருக்கான இடஒதுக்கீட்டில் 3% உள் இடஒதுக்கீடு அருந்ததியருக்கு வழங்க வகை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச், தமிழக அரசின் அருந்ததியினருக்கான 3% உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை வரவேற்று தமது ட்விட்டர் பக்கத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடித்தட்டு மக்களின் வாழ்வில் வளம்சேர்க்க வழிவகுத்துள்ள உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
2009-பிப். 27-ல் அருந்ததியினருக்கு 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்
இதேபோல் திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், SC -18%, ST - தனியாக 1% என பட்டியலின-பழங்குடியினர் இடஒதுக்கீட்டை 19% ஆக உயர்த்தியது தி.மு.க; அருந்ததியினர் சமூகத்திற்கு 3% உள் இடஒதுக்கீடு தந்ததும் கருணாநிதி அரசு. இன்று உச்சநீதிமன்றம் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறது. கருணாநிதியின் முடிவுக்கான வெற்றி இது. அக மகிழ்வோடு வரவேற்கிறேன்! என கூறியுள்ளார்.
அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மதிமுக பொதுச்செயலரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ வெளியிட்ட அறிக்கையில், சமூகநீதி இலட்சியத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட கருணாநிதியால் பட்டியல் இன மக்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்ட 18 சதவிகிதத்தில், அருந்ததியினர் சமூகத்திற்கு 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்கு உரியதாகும், வரவேற்கத்தக்கது ஆகும். அன்றைய தி.மு.க. அரசுக்குக் கிடைத்த வெற்றியாகும்; அருந்ததியினர் இன மக்களுக்கு வரப்பிரசாதமாகும் என்றார்.