புதைவட மின் கம்பி பதிப்பை துரிதப்படுத்துங்கள்.. சென்னையில் மின் விபத்துகளை தடுக்கலாம்.. ஸ்டாலின்
சென்னை: புதைவட மின் கம்பி பதிப்பு, பணிகளை விரைந்து முடித்து, சென்னையில் மின் கசிவால் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் அத்தொகுதி எம்எல்ஏவும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின்.
பின்னர் நிருபர்களிடம், அவர் கூறுகையில், மின் கசிவால் சென்னையின் பல பகுதிகளில் உயிர் பலி ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தொடர்ந்து பல முறை இந்த பிரச்சனை பற்றி சட்டசபையில் நினைவுபடுத்தி பேசியுள்ளேன். அதன் விளைவாக சில பணிகள் தொடங்கியுள்ளன. அதை மறுப்பதற்கு இல்லை.
ஆனால் புதைவட மின் கம்பி பதிப்பு பணிகளை விரைந்து முடித்தல் அவசியம். இந்த பணிகள் போகும் போக்கை பார்த்தால், 2021 ஆண்டு ஆன பிறகுதான், பணிகள் நிறைவடையும் என்ற நிலை உள்ளது.
நாங்குநேரியில் நாங்கதான் போட்டியிடுவோம்.. அடம் பிடிக்கும் பாஜக- அதிர்ச்சியில் அதிமுக
உயிர்பலி ஏற்படுவதை தவிர்க்க வேண்டுமென்று சொன்னால், உடனடியாக இந்த பணியை துரிதமாக நடத்தி முடித்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மழைக்காலம் நெருங்கிவிட்ட நிலையில், சென்னையில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லையே என்ற நிருபர்கள் கேள்விக்கு, முதல்வர் மற்றும் சில அமைச்சர்கள் வெளிநாடு சுற்றுப் பயணத்தை சுற்றுலாப் பயணமாக செய்து முடித்துவிட்டு வந்துள்ளார்கள். சுற்றுப்பயணத்தை எல்லாம் முடித்துக்கொண்டு வந்து தண்ணீர் தேங்கும் பிரச்சனை விவகாரத்தை கவனிப்பார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.