அதாவது சகோதரி, சூரியன் இல்லாவிட்டால்.. தமிழிசைக்கு ஸ்டாலின் கொடுத்த அதிரடி பதிலடி!
தமிழிசைக்கு மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிலடி தந்துள்ளார்.
சென்னை: மழை வந்தால் சூரியன் மறையும் என்று கூறிய தமிழிசைக்கு, "சூரிய சக்தி நினைத்தால் தாமரை கருகி விடும்" என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்டாலினுக்கும் தமிழிசைக்கும் ட்விட்டர் போர் வலுத்து வருகிறது. பிரச்சனை ஆரம்பித்தது என்னவோ மேகதாது விஷயமாகத்தான். ஆனால் அது இப்போது மழை, தாமரை, சூரியன் என்று போய் கொண்டிருக்கிறது.
காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு எக்கச்சக்கமாக தீவிரம் காட்டி வருகிறது.
புறக்கணிப்பு
ஆனால் இந்த மேகதாது அணை விவகாரத்தை எதிர்கொள்ள தமிழகத்தில் ஒன்றுபட்ட கருத்து நிலவவில்லை. ஆளாளுக்கு ஒரு கருத்துக்களை சொல்லி வந்தனர். அதனால் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். ஆனால் இந்த கூட்டத்தில் பாஜக, அதிமுக கட்சிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன.
பாஜக தலைவர்கள்
ஒரு பக்கம் கூட்டத்தை நடத்தினாலும் மற்றொரு புறம் திருச்சியிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மேகதாது விஷயத்தில் ஒன்றுபடாத கட்சிகளான குறிப்பாக பாஜக தலைவர்களை கடுமையாக சாடியே பேசினர்.
தாமரை மலரும்
இதற்குதான் ட்விட்டரில் தமிழிசை ஒரு பதிவை போட்டார். அதில் ''இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரை மலர செய்வோம் காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்" என்று தெரிவித்தார்.
|
தாமரை கருகும்
தமிழிசையின் இந்த ட்வீட்டுக்கு ஸ்டாலின் பதில் ட்வீட் போட்டுள்ளார். அதில் "சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்!" என்று தெரிவித்துள்ளார்.