நீட்டி முழங்காமல் என்ன பிரயோஜனம்னு சொல்லுங்க... அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கடுகடுத்த ஸ்டாலின்
சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்த நிலையில், அவரை நீட்டி முழங்காமல் விஷயத்தை சொல்லுமாறு கூறியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலினின் இந்த திடீர் ஆவேசம் அங்கிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஆகியோருக்கு அதிர்ச்சி அளித்தது.
இதனிடையே ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வால் தமிழகத்திற்குள் தலைகாட்டமுடியவில்லை, இதற்காக தாம் பாராட்டுவதாக எதிர்க்கட்சிதுணைத் தலைவர் துரைமுருகன் கூறினார்.
நீட் தேர்வு
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை முடிவடைய உள்ள நிலையில், நீட் தேர்வு தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு அதிமுக அரசு பெரும் துரோகம் இழைத்துவிட்டதாக கூறியுள்ளார்.
நீண்ட விளக்கம்
இதனிடையே நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட மு.க.ஸ்டாலின், நீட்டி முழங்காமல் நீங்க எடுத்த நடவடிக்கைகளால் என்ன பிரயோஜனம்னு சொல்லுங்க எனக் கூறினார்.
சரியான பாதை
நீட் தேர்வு விவகாரத்தில் தொடக்கம் முதலே தமிழக அரசு சரியான பாதையில் செல்வதாகவும், சந்தேகம் இருந்தால் சட்ட வல்லுநர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
தலைகாட்டவில்லை
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை நீட் தேர்வால் தலைகாட்ட முடியவில்லை, இதனால் ஜெயலலிதாவை பாராட்ட தாம் கடமைப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசினார். ஒருபக்கம் ஜெயலலிதாவை புகழ்ந்தும், இன்னொரு பக்கம் அரசை விமர்சித்தும் துரைமுருகன் பேசியதால் மேசையை தட்டுவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தனர் எம்.எல்.ஏ.க்கள்.