ஒரே நாளில்.. ஒரே கல்லில்.. 2 மாங்காய் அடித்த மு.க. ஸ்டாலின்.. பலே திமுக
Recommended Video
சென்னை: இன்று மிக மிக முக்கியமான 2 விஷயங்களை திமுக செய்து முடித்துள்ளது. ஒரு முதிர்ச்சியான கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தன்னை மீண்டும் நிலைநிறுத்தி விட்டார் என்பதும் நிரூபணமாகி உள்ளது.
முதலாவதாக, நம்பிக்கை இல்லா தீர்மானம் சம்பந்தப்பட்ட விஷயம். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே திமுக இது சம்பந்தமான ஒரு மனுவை தந்தது.
இதனால் அரசியல் களம் தகிக்க ஆரம்பித்தது. ஆட்சியை கவிழ்க்க திமுக முயன்று தோற்றுள்ளதால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக கொண்டு வர போவதாக பேசப்பட்டது. ஆனால் இன்று அதை கை விட்டு விட்டது.
பாதிப்பு
ஒரு சபாநாயகரை எதிர்த்து திமுகவுக்கு என்ன ஆகி விடப்போகிறது? இதனால் ஆட்சி மாற்றமோ, அல்லது ஆட்சிக்கு ஏதாவது பாதிப்போ வரப்போவதில்லை என்பதையும் நன்கு யோசித்து பார்த்துள்ளதாகவே தெரிகிறது.
சர்ச்சை பேச்சுகள்
அதனால்தான் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வலியுறுத்தப் போவதில்லை என்று சொல்லி உள்ளது. ஒரு பெரிய அரசியல் கட்சி, இப்படி, மனுவையும் அளித்துவிட்டு பின் வாங்கலாமா என்ற சர்ச்சை பேச்சுக்களும் எழுந்து வருகின்றன. "அன்று இருந்த சூழலில் அப்படி ஒரு நிலை எடுக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டோம், தற்போது அது தேவையில்லை, என கருதுகிறோம்: என்று ஸ்டாலின் சொன்ன விளக்கம் சரியானதே. தனக்கு என்ன தேவையோ, தன்கட்சிக்கு எது அவசியமோ, அதைதான் ஸ்டாலின் செய்துள்ளதாகவே தெரிகிறது.
தங்க தமிழ்செல்வன்
அடுத்த மேட்டர்தான் அதிரடி.. தங்க தமிழ்செல்வனை உள்ளே கொண்டு வந்ததுதான். நடந்து முடிந்த தேர்தலில் தனது செல்வாக்கையும், வாக்கு வங்கியையும் உயர்த்தி கொண்ட திமுகவுக்கு, தென் மாவட்டங்களில் சற்று கூடுதல் பலம் தேவைப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் முதல் சட்டமன்ற தேர்தல் வரை வரபோகிறது.
செந்தில் பாலாஜி
இதற்கு கட்சியை பலப்படுத்துவதும், அதற்கு பலமான அடித்தளமிடுவதும் கட்டாய தேவையாகிறது. அதனால்தான் செந்தில்பாலாஜியை வைத்து உள்ளே இழுத்து போட்டு ஜோலியை முடித்ததுடன், அதிமுகவுக்கும் ஒரு கிலியை தந்து ஒரே கல்லில் ரெண்டு மாங்காயை அடித்துள்ளார் ஸ்டாலின் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பலம் பெறும்
உண்மையில் முற்றிலும் நேர் மாறான இந்த இரு செயல்களிலும் ஒரு செய்தியும் உள்ளடங்கியுள்ளது. சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தால் திமுகவுக்கும் சரி, மக்களுக்கும் சரி எந்த பாதிப்பும், நன்மையும் வந்து விடப் போவதில்லை. மாறாக, தங்க தமிழ்ச்செல்வனை இழுத்துள்ளதன் மூலம் தேனி மாவட்டத்தில் திமுக பலப்படும். கூடவே அதிமுக பலவீனப்படும் என்பதே அந்த செய்தி.
இது திமுக கணக்கு.. மக்கள் கணக்கை தேர்தலின்போதுதான் அறிந்து கொள்ள முடியும். காத்திருப்போம்.